தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார்.
தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும் "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கி வருகிறார். இதன் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
கூலி படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் சாஹிர் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் நடிக்கின்றனர். சிறப்பு தோற்றத்தில் அமீர்கான் கூலி படத்தில் நடித்துள்ள நிலையில் 10 நாட்கள் நடித்ததாகவும், தன்னுடையக் காட்சிகள் படத்தில் ஆறு நிமிடங்கள் இடம்பெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமீர் கான் இருப்பதால் வட இந்தியாவில் கூலி படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.