வில்லியானார் ரோஜா எம்.எல்.ஏ.

புதன், 11 ஜூன் 2014 (13:50 IST)
மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்ட நடிகை ரோஜாவை என் வழி தனி வழி படத்துக்காக வில்லியாக்கியிருக்கிறார்கள்.
 
நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் நகரி தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார் ரோஜா. மக்கள் அவரை தங்களின் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்தனர். ஆந்திராவில் அமோக வெற்றியுடன் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் அவரை தமிழ்ப் படத்தில் வில்லியாக்கியிருக்கிறார்கள்.
 
ஆர்கே நடித்த எல்லாம் அவன் செயல் படத்தை இயக்கிய ஷாஜி கைலாஷ் மீண்டும் ஆர்கேயை நாயகனாக்கி இயக்கும் படம் என் வழி தனி வழி. இந்தப் படத்தில் வெற்றிச்செல்வன் என்ற நேர்மையான என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக ஆர்கே நடிக்கிறார். போலீஸ் வேலையில் அவர் காட்டும் கடமையுணர்வே அவருக்கு கத்தியாக மாறுகிறது.
 
இந்தப் படத்தில் நடிகை சீதா ஆர்கே-யின் அம்மாவாக (ஓ...என்னவொரு கொடுமை) நடிக்கிறார். படத்தில் வில்லனாக நடிப்பது ராஜீவ் கிருஷ்ணா. படத்தில் வில்லியும் உண்டு. அந்த வேடத்தை ஏற்றிருப்பவர் ரோஜா.
 
சட்டசபை தேர்தலுக்கு முன்பே இந்தப் படத்தில் கமிட்டானாராம் ரோஜா. இல்லையென்றால் வில்லியாக நடிக்க ஒப்புக் கொண்டிருப்பாரா என்பது சந்தேகம்.
 
ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இந்தப் படத்தில் கவிஞர் வைரமுத்துவும், இளையகம்பனும் பாடல்கள் எழுதியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்