நேற்றிரவுடன் முடிவுக்கு வந்த காவியதலைவன்

வியாழன், 29 மே 2014 (11:48 IST)
வசந்தபாலனின் காவியதலைவன் படப்பிடிப்பு நேற்றிரவுடன் முடிவுக்கு வந்தது.  

அரவான் படத்துக்குப் பிறகு வசந்தபாலன் தொடங்கிய படம் காவியதலைவன். 1930 -களில் இயங்கி வந்த நாடகத்துறையையும், அதில் நடித்த நடிகர்களையும்  மையப்படுத்திய இந்தக் கதையில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா, நாசர், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர். காரைக்ககுடி, தென்காசி, சென்னை ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்தது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய ரஹ்மான் இசை. பழைய நாடகத்துறையை மையப்படுத்திய படம் என்பதால் மொத்தம் 11 பாடல்கள் படத்தில் உள்ளன.
கடந்த ஒரு வாரமாக சித்தார்த், அனைகா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியை வசந்தபாலன் எடுத்து வந்தார். நேற்றிரவு அந்தப் பாடல் காட்சி நிறைவடைந்தது. அத்துடன் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்து பூசணிக்காய் உடைக்கப்பட்டது.
 
ஒய்நாட் ஸ்டுடியோவும், ரேடியன்ஸ் மீடியாவும் இணைந்து காவியதலைவனை தயாரித்துள்ளன. படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட்புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பமாகின்றன. ஜுலையில் படத்தின் பாடல்களை வெளியிட்டு ஆகஸ்டில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்