மோசமான பே‌ட்டி‌ங்கா‌ல் இ‌ந்‌தியா படுதோ‌ல்‌வி

சனி, 8 மே 2010 (09:20 IST)
20 ஓவ‌ர் உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர்8 சுற்றில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்‌‌ட்ரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது.

ா‌ர்படா‌‌‌ஸில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்‌ட்ரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வயிற்று வலியால் கடந்த போட்டியில் ஆடாத கவுதம் கம்பீர் அணிக்கு மீண்டும் திரும்பினார். இதே போல் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஜாகீர்கானும் இடம்பெற்றார்.

தினேஷ் கார்த்திக், பியுஷ் சாவ்லா நீக்கப்பட்டனர். காயத்தால் பிரவீன்குமார் விலகியதால் வினய்குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் ரோகித்ஷர்மா சேர்க்கப்பட்டார்.

பூவா தலையா வெ‌ன்ற இந்திய அணியின் தலைவ‌ர் தோ‌னி முதலில் ஆஸ்‌ட்ரேலியாவை பேட் செய்ய பணித்தார். ஷேன் வாட்சனும், டேவிட் வார்னரும் ஆஸ்‌ட்ரேலியாவின் இன்னிங்சை தொடங்கினர்.

முதல் ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் மெய்டனாக வீசினார். ஆனால் இந்த மகிழ்ச்சி அடுத்த சில ஓவர்களில் தூள் தூளானது. ஹர்பஜன்சிங் தவிர மற்ற பவுலர்களின் பந்து வீச்சை சின்னாபின்னமாக்கினார்கள்.

குறிப்பாக ரவீந்திர ஜடேஜாவின் நிலைமை பரிதாபமாக இருந்தது. தனது முதல் ஓவரை வீசிய போது, வாட்சன் ஹாட்ரிக் சிக்சர் அடித்தார். மீண்டும் 2வது முறையாக பந்து வீச அழைக்கப்பட்ட போது, வார்னர் ஹாட்ரிக் சிக்சர் விரட்டி அவரை தண்டித்தார்.

பவுண்டரியை விட பந்து அடிக்கடி சிக்சருக்கு தான் பறந்து கொண்டிருந்தது. 11வது ஓவரில் அதாவது ஸ்கோர் 104 ரன்களை எட்டிய போது ஒரு வழியாக இந்த ஜோடி பிரிந்தது.

வாட்சன் 31 ப‌ந்‌தி‌ல் 54 ரன்க‌ள் எடு‌த்‌திரு‌ந்தபோது யூசுப் ப‌த்தான் பந்தில் போல்டு ஆனார். இவ‌ர் ஒரு பவுண்டரி, 6 சிக்சர்களை ‌விளா‌சினா‌ர். அடுத்து வந்த டேவிட் ஹஸ்ஸியும் வஞ்சகமில்லாமல் இந்திய பந்து வீச்சை சாத்தினார். சிறிது நேரத்தில் வார்னர் 74 ரன்கள் குவித்த நிலையில் தோ‌னியிடம் கேட்ச் ஆனார். இவ‌ர் 2 பவுண்டரி, 7 சிக்சர்களை ‌விளா‌சினா‌ர்.

ஜெட்வேகத்தில் உயர்ந்த ஸ்கோர் இறுதிகட்டத்தில் கொஞ்சம் குறைந்தது இந்தியாவுக்கு ஆறுதலான விஷயமாகும். அதாவது ஒரு கட்டத்தில் ஆஸ்‌ட்ரேலியா எளிதில் 200 ரன்களை கடந்து விடும் என்ற நிலைமை இருந்தது. ஆனால் கடைசி 4 ஓவர்களில் இந்தியா கட்டுக்கோப்புடன் பந்து வீசியதால் எதிர்பார்த்த ஸ்கோரை ஆஸ்‌ட்ரேலியாவால் எட்டமுடியவில்லை.

20 ஓவர்களில் ஆஸ்‌ட்ரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. கடைசி 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆஸ்‌ட்ரேலியா மொத்தம் 16 சிக்சர்கள் விளாசி இருந்தது. இன்னும் ஒரு சிக்சர் அடித்து இருந்தால் தென்ஆப்பிரிக்காவின் 17 சிக்சர் (இங்கிலாந்துக்கு எதிராக, 2009ஆம் ஆண்டு) உலக சாதனையை சமன் செய்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. விஜய் (2), கம்பீர் (9) இருவரும் திர்க் நேனஸ் பந்தில் கேட்ச் ஆனார்கள். ஆஸ்‌ட்ரேலியாவின் வேகப்பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.

ரெய்னா (5), யுவராஜ்சிங் (1), டோனி (2), யூசுப் ப‌த்தான் (1), ரவீந்திர ஜடேஜா (4) ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட இரட்டை இலக்கை தொடவில்லை.

ரசிகர்களை வெறுப்பேற்றிய இத்தகைய மோசமான ஆட்டத்திற்கு மத்தியிலும், ரோகித் ஷர்மா மட்டும் ஆறுதல் அளிக்கும் வகையில் அதிரடியாக ஆடினார். அவரது கடைசி வரையிலான போராட்டம் இந்தியாவை மோசமான தோல்வியில் இருந்து காப்பாற்ற மட்டுமே உதவியது.

முடிவில் இந்திய அணி 17.4 ஓவர்களில் 135 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதன் மூலம் ஆஸ்‌ட்ரேலியா 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 46 ப‌ந்துக‌ளி‌ல் 79 ரன்க‌ள் கு‌‌வி‌த்த ரோகித் ஷர்மா கடைசி வரை களத்தில் இருந்தார். இவ‌ர் 4 பவுண்டரி, 6 சிக்சர்களை ‌விளா‌சினா‌ர்.

இந்த படுதோல்வியால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அடு‌த்து மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவு, இலங்கை அ‌ணி‌க்கு எ‌திரான வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவால் அரைஇறுதிக்கு தகுதி பெற முடியும். இந்தியா அடுத்து மே‌ற்‌கி‌‌ந்‌திய அணியை நாளை சந்திக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்