தெய்வத்துக்கே மாறுவேஷமா? - கௌரவ வர்ணனையாளராக தோனி!?

புதன், 6 நவம்பர் 2019 (15:49 IST)
இந்தியா – வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டிகளில் கலந்துரையாட கௌரவ வர்ணனையாளராக மகேந்திரசிங் தோனி அழைக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்தியா – வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டிகள் எதிர்வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் இந்த தொடரை ஒளிபரப்ப ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒப்புதல் வாங்கியுள்ளது. முதன்முறையாக இந்தியாவில் நடைபெறும் பகல் – இரவு ஆட்டம் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் முன்னாள் டெஸ்ட் தொடர் கேப்டன்களை அழைத்து வர்ணனையாளர்கள் அறையில் சிறப்பு வர்ணனை நிகழ்ச்சியை நடத்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதி கேட்டி பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

மேலும் முன்னாள் இந்திய அணி கேப்டன் மகேந்திரசிங் தோனியையும் சிறப்பு வர்ணனையாளராக அழைத்துள்ளனர். உலக கோப்பை போட்டிகளுக்கு பிறகு எந்த போட்டிகளிலும் கலந்து கொள்ளாமல் இருக்கிறார் மகேந்திரசிங் தோனி.

தோனி மீண்டும் விளையாட வருவார் என ரசிகர்கள் ஒவ்வொரு ஆட்டத்தின்போதும் ஆவலாக எதிர்பார்த்து வரும் நிலையில் அவர் வர்ணனையாளர் குழுவில் அழைக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அதிகம் பங்கு பெறும் வர்ணனையாளர்கள் நிகழ்ச்சியில் தோனி அழைக்கப்பட்டுள்ளது ‘இனி தோனி விளையாட வர மாட்டாரோ’ என்ற பயத்தை ஏற்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் வேதனைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்