ஸ்ரேயாஸ் ஐயரைக் கேப்டனாக்க துடிக்கும் அணி… ஏலத்தில் செம்ம டிமாண்ட்!

புதன், 19 ஜனவரி 2022 (10:54 IST)
ஸ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுக்க 3 அணிகள் முனைப்பாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

டெல்லி அணியில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடி அந்த அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டவர் ஸ்ரேயாஸ் ஐயர். அவர் தலைமையில் டெல்லி அணி மிக சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டி வரை சென்றது. ஆனால் அடுத்த ஆண்டே கேப்டன் பொறுப்பு ரிஷப் பண்ட் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அவருக்கும் டெல்லி அணி நிர்வாகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது.

இதையடுத்து டெல்லி அணி அவரை இப்போது விடுவித்துள்ளது. புதிதாக நுழையவுள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகளில் ஒன்றில அவர் இணைவார் என்றும் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் என்று சொல்லப்பட்ட நிலையில் இப்போது அவர் ஏலத்தில் பங்கெடுக்க உள்ளார். ஏனென்றால் அவரை எந்த அணியும் கேப்டனாக நியமிக்க முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவரை ஏலத்தில் எடுக்க மூன்று அணிகளுக்குள் கடும்போட்டி இருக்கலாம் என சொல்லப்படுகிறது. கொல்கத்தா, பஞ்சாப் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நிலவும் என சொல்லப்படுகிறது. அதிலும் ஆர் சி பி அணி அவரை ஏலத்தில் எடுத்து கோலிக்குப் பதில் கேப்டனாக நியமிக்க ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் ஏலத்தில் அவருக்கு மிகப்பெரிய தொகை கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்