2023 வரை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்… கிரிக்கெட் ரசிகர்களை குஷியாக்கிய செய்தி!

சனி, 16 அக்டோபர் 2021 (16:40 IST)
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக டிராவிட் இரண்டு ஆண்டுகளுக்கு பொறுப்பேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிய உள்ளது. அதையடுத்து இந்திய அணியை யார் வழிநடத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் ‘இந்திய அணியின் எதிர்காலம் டிராவிட் மற்றும் தோனியிடம் ஒப்படைக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும். டிராவிட் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பையும்,தோனி ஆலோசகர் பொறுப்பையும் ஏற்றால் இந்திய அணி உச்சங்களைத் தொடும்’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணிக்கு இடைக்கால பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் தொடர் வரைக்குமாவது டிராவிட் இடைக்கால பயிற்சியாளராக செயல்பட வேண்டும் என பிசிசிஐ சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இப்போது 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை வரை டிராவிட் பயிற்சியாளராக செயல்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை என்றாலும் பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து இந்த தகவல் பரவி ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்