இறக்கும் போது பாதி இந்தியனாக இருப்பேன்… டிவில்லியர்ஸ் உருக்கம்!

சனி, 20 நவம்பர் 2021 (11:47 IST)
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் தென் ஆப்பிரிக்க அணிக்காக உலக டெஸ்ட் தொடர்கள், டி20, உலகக்கோப்பை என பல தொடர்களில் விளையாடியவர். ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக டி வில்லியர்ஸ் விளையாடினார்.

இந்நிலையில் தற்போது அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் மொத்தமாக ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டி வில்லியட்ஸ் “இது ஒரு அற்புதமான பயணம். ஆனால் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் நான் ஓய்வு பெறுகிறேன். இதுவரையிலான அனைத்து போட்டிகளிலும் சக வீரர்களுடன் உற்சாகமாகவும், ஆர்வமாகவும் விளையாடி வந்துள்ளேன். இப்போது எனது 37 வயதில் அந்த நெருப்பு அவ்வளவு பிரகாசமாக இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஓய்வு குறித்து ஐபிஎல்லில் தான் விளையாடிய ஆர் சிபி அணி குறித்தும் பேசியுள்ள அவர் ‘ஆர் சி பி அணிக்காக நிறைய போட்டிகளில் விளையாடி விட்டேன். ஆனால் கோப்பையை வெல்லவில்லை. ஆனால் எதிர்காலத்தில் நிறைய வரும் என்று நம்புகிறேன். ஆர் சி பி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக பாதி இந்தியனாகவே வாழ்ந்துவிட்டேன். இந்த உலகத்தில் நான் இல்லாத போதும் பாதி இந்தியனாகவும், பாதி தென் ஆப்பிரிக்கனாகவுமே அறியப்படுவேன்’ எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்