இங்கிலாந்து அணியிடம் இந்தியா அங்கு சென்றிருந்தபோது ஒரு போட்டியில் கூட வெற்றிபெற முடியாமல் மண்ணைக் கவ்வியது. இப்போது இந்தியா வந்திருந்த இங்கிலாந்து ஒரு நாள் போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் மண்ணைக் கவ்வியது.
இரு அணிகளும் தங்களது வீட்டில் புலி வெளியே சென்றால் எலி என்பதைத்தான் இந்த போட்டிகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.
இளம் வீரர்களான ரஹானே, பார்த்தீவ், கோலி, பந்து வீச்சில் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, வருண் ஆரோன், உமேஷ் யாதவ், வினய் குமார் ஆகியோர் நல்ல ஆக்ரோஷம் காட்டினாலும் தோனியின் பேட்டிங் இந்தத் தொடரில் அலாதியாக அமைந்தது. இங்கிலாந்துக்கு எதிராக அவர் தொடர்ச்சியாக 7 முறை நாட் அவுட்டாகத் திகழ்ந்துள்ளார்..
இந்தியாவில் வெல்வது கடினம் என்ற மன நிலையிலேயே இங்கிலாந்து வருகிறது. அதேபோல் இங்கிலாந்தில் வெல்வது கடினம் என்ற மன நிலையிலேயே இந்தியா செல்கிறது.
இந்திய கேப்டன்களில் பட்டௌடி, வடேகருக்குப் பிறகு வந்தவர்களில் பிஷன் பேடி சுனில் கவாஸ்கர், அஜாருதீன் ஆகியோரும் அயல்நாடுகளில் விளையாடுவது என்பது நாம் வெற்றி பெறுவதற்காக அல்ல என்ற மனநிலையையே கொண்டிருந்தனர். கபில்தேவ் அந்த மனோநிலையை முதலில் முடிவுக்குக் கொண்டுவந்தார். மேற்கிந்திய அணியை முதலில் மேற்கிந்திய மண்ணில் ஒரு போட்டியில் அபாரமாக வெற்றி பெற்று பிறகு உலகக் கோப்பையில் இருமுறை வென்று கோப்பையை பெற்றுத்தந்தார்.
2000ஆம் ஆண்டு வரை இந்தியக் கேப்டன்களின் மன நிலை அதுவாகவே இருந்தது. அதன் பிறகு கங்கூலி வந்தபிறகுதான் எல்லாம் ஆட்டக்களங்கள்தான், எதிலும் நாம் வெல்ல முடியும் என்ற ஒரு சிந்தனையை அணிக்குள் வளர்த்தார். அதன் பலன்தான் நமது டெஸ்ட் தரநிலை முதலிடமும், உலகக்கோப்பை இரண்டாவது சாம்பியன் பட்டமும்!
தோனியின் அயல்நாட்டு பயணங்கள் குறித்த பேச்சுக்கள் அஜாருதீன் போன்று எதிர்மறையாக இல்லாவிட்டாலும் தென் ஆப்பிரிக்கா தொடரில் காட்டிய வேகம் அவரிடம் இங்கிலாந்தில் இல்லை. காயங்கள் ஏற்படுவது சகஜம்தான், ஆனால் அதனை எதிர்கொள்ள முதலில் தயாராக இருக்கவேண்டும். தைரியமாக சில முடிவுகளை எடுக்கவேண்டும். சேவாக் இல்லையா உடனே அந்த இடத்தில் ராபின் உத்தப்பா அல்லது வேறு அதிரடி வீரரா என்ற முடிவை தோனி எடுத்திருக்கவேண்டும்.
ஏன் எடுக்க முடியவில்லை? காரணம் இங்கிலாந்து பிட்சில் நேர்முறையாக விளையாடும் மரபான பேட்ஸ்மென்களே பரிமளிப்பார்கள் என்ற ஒரு எதிர்மறை மனோநிலை.
தற்போது இங்கிலாந்தும் அதே மனோநிலையில்தான் இங்கு வந்தது. இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்துவது கடினம் என்ற காலங்காலமான மனோபாவத்துடன் வந்தால் வெற்றி எப்படி சாத்தியமாகும்?
மேலும் இந்திய வீரர்கள் உள்ளூரில் விளையாடும்போது வீரம் காட்டுவது அவர்களின் சமீபத்திய ஐ.பி.எல். ஒப்பந்தங்களுக்கும் தொடர்பை காட்டுகிறது.
ஏனெனில் ஐ.பி.எல். தொடரில் நன்றாக விளையாடி விட்டு தேசத்திற்கு ஆடும்போது நன்றாக விளையாடவில்லை என்றால் ரசிகர்கள் எங்கு தங்களை பணத்திற்காக ஆடுகிறார் என்று கூறிவிடுவாரோ என்ற அச்சமும் ஒரு புறம் இருக்கிறது.
ஆனால் அயல்நாட்டில் விளையாடும்போது சரியாக விளையாடாவிட்டால் ரசிகர்களுக்கு வேறு காரணம் கூறிக் கொள்ளலாம் என்ற போக்கு உள்ளதாகவும் தெரிகிறது. அதாவ்து பிட்ச், ஸ்விங், என்று கூறி கொள்ளலாம்.
எனவே பணம் சம்பாதிப்பது அவசியம்தான், ஆனால் எந்த ஒரு நாட்டின் மக்களும் ஒரு மக்களாகத் தங்களை நினைத்து ஒருவிளையாட்டை ரசிப்பது தேசியவாத உணர்வினாலேயே.
இதனால் இந்தியாவாக தோனி, சச்சின், திராவிட் களமிறங்கும்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேறு, ஆனால் மும்பை இந்தியன்ஸிற்காக சச்சின் இறங்கும்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேறு ஒன்றாக உள்ளது.
எனவே இளம் வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தனக்கு கிடைப்பது புகழ் என்ற மாயையிலிருந்து விடுபடவேண்டும். இருபது ஓவர் கிரிக்கெட்டினால்தான் இன்று வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு அழிந்து வருகிறது.
இந்தியா வெளியே சென்றால் உதை வாங்குவதும் உள்ளூரில் அனைவரையும் கூப்பிட்டு உதைப்பதும் ரசிகர்களிடையே ஒரு ஆயாசத்தை ஏற்படுத்துவதால்தான் இந்திய, இங்கிலாந்து ஒருநாள் தொடரில் மைதானத்தில் கூட்டம் அதிகம் இல்லை.
மும்பையில் 38,000 கொள்ளளவு கோண்ட வான்கடே ஸ்டேடியத்தில் 17,000 ரசிகர்களே வந்திருந்தனர். கொல்கத்தாவில் கூட்டம் பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது.
காரணம் இருபது ஓவர் கிரிக்கெட்டின் வருகை அல்ல! மாறாக ஒரு அணி எந்த வித போராட்டமும் இல்லாமல் சரணடைந்தால் ரசிகர்களுக்கு அறுவையாக மாறி விடுகிறது.
கிரிக்கெட் ஆட்டம் என்பது திரில் படம் போல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஒற்றைத்தனமாக ஒரே அணிதான் வெற்றி பெறும் என்பது ரசிகர்களை ஆயாசப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இந்தியா விளையாடும்போது ஒருநாள் போட்டிகளுக்கு கூட்டம் குறைகிறது என்பது எச்சரிக்கை மணியாகும். சிந்திப்பார்களா நிர்வாகிகள்?