படு மோசமான தினம்; பேட்டிங், பந்துவீச்சு இரண்டும் அம்பேல்!

வெள்ளி, 13 ஜனவரி 2012 (19:05 IST)
FILE
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, மீண்டும் களமிறங்கிய ஆஸ்ட்ரேலிய அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் 69 பந்துகளில் அதிரடி சதம் எடுத்து வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சினார்.

முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்ட்ரேலியா விக்கெட் இழ்ப்பின்றி 149 ரன்கள் எடுத்துள்ளது. 23 ஓவர்களில் இந்த ரன்களை எடுத்ததன் மூலம் ஓவருக்கு 6.47 ரன்கள் ரன் விகிதம் வைத்துள்ளது.

பேட்டிங்கில் எந்த ஒரு வீரரிடமும் 'அப்பிளிகேஷன்' இல்லை. கவுதம் கம்பீர் 31 ரன்கள் வரை நன்றாக விளையாடினார். மேலே செல்வார் என்று எதிர்பார்த்தால் பெவிலியன் சென்றார்.

சேவாக் தனது வாழ்க்கையில் முக்கியமான முடிவை எடுப்பது நல்லது. அவரை பின்னால் களமிறங்கச் செய்து துவக்க வீரராக ரஹானே போன்றவர்களை முயன்று பார்க்கலாம்.

டிராவிட், லஷ்மண் ஆகியோரில் ஒருவரை அவசிய நீக்கிவிட்ட் ரோஹித் ஷர்மாவை முயன்று பார்க்கவேண்டும். கோலி டவுன் ஆர்டரில் சேவாக் களமிறங்குவது நல்லது என்றே தோன்றுகிறது

கோலி இன்று சிறப்பாகவே ஆடினார். பிட்சில் எதிர்பார்த்த அளவுக்கு பூதம் ஒன்றும் இல்லை. பேட்டிங் சுலபமாகவே இருந்தது. இன்னும் சொல்லப்போனால் மெல்பர்ன் ஆட்டக்களத்தை விடவும் சிட்னி முதல் நாள் ஆட்டக்களத்தை விடவும் இது பேட்டிங்கிற்கு சாதகமான ஆட்டக்களம் என்றே கூற முடியும்.

சச்சின் டெண்டுல்கர் நன்றாகத் துவங்கினார் அபாரமான அவரடு டிரேட்மார்க் ஸ்ட்ரெய்ட் டிரைவ்களுடன் துவங்கிய அவர் கடைசியில் நேராக வந்த ஹேரிஸ் பந்தை லெக் திசையில் திருப்பி விட முயன்று பீட் ஆனார் பந்து மட்டையை கடந்து பேடைத் தாக்கியது.

டிராவிட் உண்மையில் அகலமான மட்டை ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது. அவர் 9 ரன்கள் எடுத்து மீண்டும் முன்னங்காலை முன் கூட்டியே முன் நகர்த்தி பந்து உள்ளேவரும்போது அதனை எடுக்க முடியாமல் முன்னால் விழுவது போலாகி பவுல்டு ஆனார். சிடில் மீண்டும் டிராவிடை பவுல்டு செய்தார்.

131/4 என்ற நிலையிலிருந்து 161 ரன்களுக்கு இந்தியா சுருண்டது. ஹில்ஃபென் ஹாஸ் மீண்டும் 4 விக்கெட்டுகளைக் கைப்ப்ற்றினார். சிடில் 3 விக்கெட்டுகளையும் ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளையும் ஹேரிஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆஸ்ட்ரேலிய அணி பேட்டிங்கில் களமிறங்கியபோது ஜாகீர் கான் உட்பட உமேஷ் யாதவ், டெஸ்ட் போட்டிகளுக்கு லாயக்கற்ற வினய் குமார் அனைவருக்கும் அடி பலமாக விழுந்தது. அடித்து நொறுக்கியவர் டேவிட் வார்னர்.

ஜாகீர் கானை முதலில் கோவன் 3 பவுண்டரிகள் விளாசினார், காரணம் லெக் ஸைடு பவுலிங் போட்டார். உமேஷ் யாதவ் ஷாட் பிட்ச், லெக் சைடு பந்துகள் என்று மிகவும் பரிதாபகரமாக வீசினார்.

நீண்ட நேரம் இஷாந்தைக் கொண்டுவராமல் தவறு செய்த தோனி இஷாந்தை கொண்டுவந்தபோது தாக்குதல் மூடில் இருந்த வார்னர் அவரை லாங் ஆன் திசையில் மிகப்பிரமாதமான சிக்சரை அடித்தார்.

38 பந்துகளில் அரைசதம் கண்ட வார்னர், இந்தியாவின் தொடர்ச்சியான மோசமான பந்து வீச்சினால் 69 பந்துகளில் சதம் எடுத்தார். துவக்க வீரரொருவர் 69 பந்துகளில் சதம் எடுப்பது இதுவே முதல் முறை. வினய் குமாரின் சொத்தைப் பந்து ஒன்றை மிகப்பெரிய சிக்சருக்குத் தூக்கி சதமெடுத்தார்.

கில்கிறிஸ்ட்தான் ஆஸி. அதிவேக டெஸ்ட் சதத்திற்கான சாதனையை வைத்துள்ளார். அடுத்த படியாக டேவிட் வார்னர் தற்போது உள்ளார்.

இந்தியா வாங்கும் அடி போதாதென்று நடுவர் தர்மசேனா வேறு போட்டுப் பார்த்தார். எட் கோவனின் கிளவ்வை ஒரு பந்து தட்டிச் செல்ல தோனியைத் தவிர ஒருவரும் அப்பீல் செய்யவில்லை. நடுவர் அவுட் தரவில்லை. சேவாக் பந்தில் மீண்டும் கோவன் எல்.பி. ஆகியிருப்பார் அதனையும் நடுவர் அவுட் தரவில்லை.

கடைசி ஜாகீர் கான் ஓவரில் 3 முறை வார்னர் பீட்டன் ஆனார். வார்னர் கடைசியில் 80 பந்துகளில் 13 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் சகிதம் 104 ரன்கள் எடுத்தும், கோவன் 40 ரன்கள் எடுத்தும் விளையாடி வருகின்றனர். ஒருநேரத்தில் மொத்த ரன் விகிதம் 7.32 ஆக இருந்தது. அடி வாங்கியவர்களில் இஷாந்தும், உமேஷ் யாதவ், வினய் குமாரும் சம பங்கு வகிக்கின்றனர்.

இன்றைய தினம் இந்தியாவுக்கு மிகவும் வேதனை தரும் நாளாக அமைந்து விட்டது. காரணம்: இந்திய வீரர்களின் மனோநிலையே.

வெப்துனியாவைப் படிக்கவும்