"நட்சத்திர வீரர்கள்" பற்றி வாயைத் திறக்காமல் இருப்பதே நல்லது -கபில்தேவ்

சனி, 20 அக்டோபர் 2012 (17:27 IST)
FILE
தேசிய ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு டெல்லியில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட கபில்தேவ் அதற்கிடையில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்கையில், சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பற்றிய கேள்விக்கு "பெரிய வீரர்கள் பற்றி வாயைத் திறக்காமல் இருப்பதே நல்லது என்று நழுவியுள்ளார்.

இதே கபில்தேவ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு வெளியே இருந்தபோது சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும், 2011 உலகக் கோப்பையுடன் சென்றிருக்க வேண்டும், உயரத்தில் இருக்கும்போது ஓய்வு பெற வேண்டும் என்றேல்லாம் கூறிவிட்டு தற்போது 'பெரிய' இடத்தினால் அழைக்கப்பட்ட பின்பு அந்தர் பல்டியாக பதி‌ல் அளித்துள்ளமை பி.சி.சி.ஐ.-யின் சக்தியைக் காட்டுகிறது என்பதைவிட கபில்தேவ் போன்ற ஆகிருதிகளே பி.சி.சி.ஐ.-யின் அதிகாரக் கொட்டடியில் பதுங்குகிறது என்பதைத்தான் காட்டுவதாக உள்ளது.

இதே நிகழ்ச்சியில் அவர் சேவாக், கம்பீர் பற்றி கேட்கப்பட்டபோது, "இவர்கள் அளவுக்கு திறமையான வீரர்கள் ரன் எடுக்காமல் சோடை போவது கவலையளிப்பதாகும். பெரிய பெயர் எடுத்தாகிவிட்டால் அதனை தொடர்ந்து பராமரிப்பது அவசியம்.

இவர்கள் நாட்டுக்காக மட்டுமல்ல தங்கள் சொந்த நலனுக்காகவாவது ரன்களை எடுப்பது அவசியம்.

மகேந்திர சிங் தோனியை "கேப்டன் கூல்" என்று கூறுவதால் அவர் ஆக்ரோஷமாக இல்லை என்று முன்பு கடுமையாக வர்ணித்த கபில், அவரை மேலும் ஆக்ரோஷமாக விளையாடவேண்டும் என்றும் பேட்டிங்கில் அவரது ஆட்டம் போதாது என்றெல்லாம் கூறிய கபில்தேவ், தற்போது "அவர் உலகக் கோப்பையை வென்றுள்ளார், இருபது ஓவர் உலகக் கோப்பை, டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளார், ஐ.சி.சி. டெஸ்ட் தரநிலையில் நம்பர் 1 இடத்தை இந்தியா இவரது கேப்டன்சியில்தான் பெற்றது. ஆனால் கேப்டன் என்றால் ஒவ்வொரு போட்டியிலும் வெல்லவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம், இது கடினம்! என்கிறார் கபில்தேவ்.

பி.சி.சி.ஐ. அழைத்து சமரசம் செய்து கொண்டுவிட்டதால் கபில் அடித்துள்ள அந்தர்பல்டிகள் இப்போது துவங்கியுள்ளது.

மேலும் பல்டிகள் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்