மற்ற T20 கிரிக்கெட் லீகில் விளையாட அனுமதி மறுக்கும் பி.சி.சி.ஐ.-யின் அராஜகம்!
புதன், 4 ஜூலை 2012 (18:44 IST)
பிசிசிஐ-யின் அதிகாரப் போக்குகள்!
கிரிக்கெட்டையும் இந்திய வீரர்களையும் ஏதோ மார்க்கெட்டைக் கலக்கும் சர்ஃப், ரெக்சோனா, ஹமாம், பெப்சி, கோககோலா போன்று வைத்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.
இந்தியன் பிரிமியர் லீக் தவிர பங்களாதேஷ், தற்போது இலங்க்கை, ஏற்கனவே ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஐ.பி.எல். போலவே இருபது ஓவர் கிரிக்கெட் தொடர்கள் நடைபெறுகின்றன. இதில் விளையாட எந்த ஒரு இந்திய வீரருக்கும் அனுமதி வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து வருகிறது.
மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை ஐ.பி.எல். கிரிக்கெட்டிற்கு அனுப்ப பல்வேறு விதமான நெருக்கடிகளைக் கொடுக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இருபது ஓவர் லீகுகளில் முதன்மை இந்திய வீரர்களை அழைத்தும் அவர்களை விளையாட அனுமதி மறுத்து அராஜகப் போக்கை வெளிப்படுத்தி வருகிறது பி.சி.சி.ஐ.
தற்போது ஹர்பஜன் சிங் இங்கிலாந்து கவுண்டி அணியான எஸ்ஸெக்ஸ் அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் பிரெண்ட்ஸ் லைஃப் T20 லீகில் விளையாட ஒப்பந்தம் செய்யப்படவில்லை. காரணம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அராஜகப் போக்கு!
கடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் மற்ற நாட்டு T20 தொடர்களில் இந்தியாவின் முதன்மை 7 வீரர்களுக்கு அழைப்பு விடுக்கபபட்டும் வாரியம் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சச்சின், சேவாக் உள்ளிட்ட பெரிய வீரர்கள் மட்டுமல்ல மணீஷ் பாண்டே, உள்ளிட்ட விளிம்பு நிலையில் உள்ள வீரர்களும் அயல்நாட்டில் நடைபெறும் பிற T20 கிரிக்கெட்டில் கலந்து கொள்ளக்கூடாது! இதுதான் பி.சி.சி.ஐ-யின் அடிமை சாசன ஒப்பந்தம்.
இலங்கை கிரிக்கெட் வாரியம் நடத்தவிருந்த பிரீமியர் லீக் போட்டிகள் இந்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. காரணம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மறைமுக அடக்குமுறையே!
ஆஸ்ட்ரேலியாவில் நடந்த பிக்பாஷ், தென் ஆப்பிரிக்காவின் இருபது ஓவர் தொடர் போன்ற தொடர்களுக்கு இந்திய வீரர்களுக்கு அழைப்பு இருந்தது. ஆனால் ஒருவரும் விளையாட அனுமதி வழங்கப்படவில்லை.
ஏன் இந்த பாரபட்சம்? அடுத்த நாட்டு வீரர்கள் ஐ.பி.எல்.-இல் ஆடும்போது ஏன் இந்திய வீரர்கள் அயல்நாட்டு தொடர்களில் விளையாட ஏன் அனுமதியில்லை?
அதாவது பிறநாட்டு லீக் கிரிக்கெட்கள் இந்திய வீரர்களுக்கு அதிகப்படியாக பணம் கொடுத்துவிடக்கூடாது என்ற அச்சத்தினால், இதனால் தன்னுடைய சொத்துகளுக்கு பங்கம் ஏற்பட்டு விடுமோ என்ற அதிகாரம் சார்ந்த பயம்!
மேலும் ஐ.பி.எல் கிரிக்கெட்டிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அயல்நாட்டு வீரர்களின் ஒப்பந்தத் தொகைகளில் 10% அந்தந்த நாட்டு வாரியங்களுக்குச் செல்கிறது. இதனால் மற்ற வாரியங்கள் கேள்வி கேட்பதில்லை. தான் சுயநலமாக இருப்பதோடு மற்றவர்களையும் சுயநலமிகளாக மாற்றி வைத்திருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.
இந்திய வீரர்களின் அயல்நாட்டு வாய்ப்புகளை தனது சாமர்த்தியமான ஐ.பி.எல். ஒப்பந்த விதிமுறைகளின் மூலம் தடுத்து வருகிறது பி.சி.சி.ஐ.
கிரிக்கெட்டையும் இந்திய வீரர்களையும் ஏதோ மார்க்கெட்டைக் கலக்கும் சர்ஃப், ரெக்சோனா, ஹமாம், பெப்சி, கோககோலா போன்று வைத்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அயல்நாட்டு வீரர்கள் இங்கு வந்து விளையாடலாம் ஆனால் இந்திய வீரர்கள் செல்லக்கூடாது இது என்ன நியாயம்? ஐ.சி.சி. உறுப்பு நாடுகளில் ஒருவர் கூட இந்தக் கேள்வியை எழுப்புவதில்லை.
வெறுமனே இந்திய வீரர்களின் சம்பாத்தியத்தை கட்டுப்படுத்துவது மட்டுமல்ல இது, மாறாக பல்வேறு நாடுகளில், பல்வேறு கிரிக்கெட் சூழல்களில் பல்வேறு வீரர்களுடன் ஒரு இளம் இந்திய வீரர் விளையாடி பெறும் அனுபவத்தைத் தடுக்கிறது பிசிசிஐ. அனுபவத்தைத் தடுக்க இதற்கு என்ன உரிமை இருக்கிறது?
இதையும் மீறி அயல்நாடுகளில், குறிப்பாக இங்கிலாந்து கிரிக்கெட் கவுண்டியில் விளையாட ஆட்சேபணை இல்லை சான்றிதழ் வழங்கினாலும் அங்கு இருபது ஓவர் கிரிக்கெட் விளையாட அனுமதி கிடையாது!
மற்ற நாடுகளின் இருபது ஓவர் கிரிக்கெட் கிளப் மட்டத்தில் ஆட அனுமதி கேட்ட 7 வீரர்களில் ஒருவர் இந்திய வீரர்கள் சங்கத்தை அமைக்க திட்டமிட்டதாக செய்திகள் வெளியாகி அதனை மிகவும் உரத்த குரலில் மறுத்து, பிறகு அந்த வீரரின் வாய்ப்புகளை பிசிசிஐ. தடுத்து வருவதாகவும் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அவருக்கு நியாயமான சம்பளம் கூட கிடைக்காமல் செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது.
பி.சி.சி.ஐ-யை எதிர்த்துக் கொண்டால் இதுதான் நடக்கும்!
இப்படி ஒரு அமைப்பு கிரிக்கெட்டை நடத்த அனுமதிக்கலாமா? உடனடியாக மத்திய அரசின் விளையாட்டுத் துறை கிரிக்கெட்டை எடுத்துக் கொள்ள முன்வரவேண்டும்.
ஐ.சி.சி. மட்டத்தில் எல்லா நாடுகளும் பிசிசிஐ-யின் பண, அதிகாரபலத்தைக் கண்டு அஞ்சாமல் எதிர்த்துக் குரல் கொடுக்கவேண்டும்.
மிக முக்கியமாக இந்திய வீரர்கள் சங்கம் அமைக்கப்படவேண்டும், அதில் பி.சி.சி.ஐ-யின் வீர்ர்கள் ஒப்பந்தத் தகிடுதத்தங்களை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தவேண்டும்!