தமிழகத்தில் நடக்கும் பதவி இழுபறி போட்டியை குறித்த தனது கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் பூமி நாயகன். அவரது ஒரு ட்வீட்டில் அமைதிப்படை அமாவாசையின் பெயர் இழுக்கப்பட்டிருந்தது. சும்மா இருக்கும் வால்டர் வெற்றிவேலை பூமி நாயகன் ஏன் வம்புக்கிழுக்க வேண்டும்?
காவிரிப் பிரச்சனையின் போது, தமிழில் நடிக்கும் கன்னட நடிகர்களிடம் மைக்கை தந்து கன்னடர்களையும், கன்னட சினிமாவையும் விமர்சிக்க வற்புறுத்தியவர்களில் வெற்றிவேலும் ஒருவர். வெற்றிவேலின் படம் கர்நாடகாவில் ஓடுவதில்லை, அதனால் தைரியமாக மற்ற நடிகர்களை தாக்கிப் பேச வற்புறுத்தினார். அதுவே தமிழக பிரச்சனைகளாக இருந்தால் வெற்றிவேல் வாய் திறப்பாரா?
இப்போதும்கூட ஆழ்ந்த அதிமுக விசுவாசியான வெற்றிவேல், யார் பக்கம் பேசினாலும் பிறகு பிரச்சனை என்று வாய்மூடி இருக்கிறார். இவரது படங்கள் கர்நாடகாவிலும் ஓடியிருந்தால் கன்னடர்களுக்கு எதிராக பேசியிருப்பாரா? தனது எல்லைக்குள் நடக்கும் பிரச்சனையில் இவர் கருத்துகூற மாட்டாராம், ஆனால், அடுத்தவர்கள் அவர்களின் எல்லைக்குள் நடக்கும் பிரச்சனையில் கடுமையாக தாக்கிப் பேச வேண்டுமாம்.
வெற்றிவேலின் இந்த தைரியத்தை சுட்டிக்காட்டதான் பூமி நாயகன் அவரது பெயரை வேண்டுமென்றே குறிப்பிட்டிருக்கிறார். எங்கே தைரியமிருந்தால் தமிழக பதவி சண்டை விஷயத்தில் இவர் கருத்து சொல்லி பார்க்கட்டும்.
தமிழக அரசியல் புயலடித்து போயிருக்கும் வேளையில் நடனப்புயலின் படம் ஒன்றும் காப்பி சுழலில் சிக்கியிருக்கிறது. நடனப்புயலின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சில தினங்கள் முன்பு வெளியிட்டனர். அப்படியே இப் மென் திரைப்படத்தின் நாயகனின் போஸில் நடனப்புயல் தாடியுடன் நிற்கிறார். போஸ்டரையே காப்பி அடித்தவர்கள், கதையை மட்டும் சொந்தமாகவா எழுதியிருப்பார்கள் என்று இப்பவே நெகடிவ் கமெண்ட்.
பார்த்து சூதனமா நடந்துக்கோங்க...
ஒரு படம்கூட ஹிட் கொடுக்காமல் ஒருவர் பல வருடமாக நடித்துக் கொண்டிருக்கிறாரே... பெயரில் மட்டும் வெற்றியை வைத்திருக்கும் நடிகர் ஒருவர். புரியலை... சமீபத்தில் நடிகை அஞ்சலிக்கு தோசை சுட்டு தந்தவர்...? யப்பா இப்பவாவது புரிஞ்சுதே. அவரைப் பற்றிதான் ஆத்திரமாக பேசிக் கொண்டிருக்கிறது தயாரிப்பாளர்கள் வட்டாரம்.
நடிகருக்கு ஏதோ தல என்று நினைப்பு. நான் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். கேட்டால், கொள்கைஜி என்று தயாரிப்பாளர்களை கொலைவெறி ஏற்றுகிறார். இவரது படம் சென்ற வாரம் வெளியானது. அந்த அடிமைகள் படத்தால் பல கோடி நஷ்டம் தயாரிப்பாளருக்கு. நடிகர் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வந்திருந்தால் படம் வருவது பற்றி நாலுபேருக்கு தொரிந்திருக்கும், படத்துக்கு விளம்பரமும் கிடைத்திருக்கும். நடிகரின் கொள்கையால் அதுவும் போச்சு.
அதேநேரம் பிரகாச நடிகரின் மனைவி நடிக்கும் படத்துக்காக தோசை சுட்டு அந்தப் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார். இதுதான் நடிகரை வைத்து படம் தயாரித்தவர்களை கொலைவெறி கொள்ள செய்திருக்கிறது.
நடிகரும் அவருடைய கொள்கையும்... தூக்கி கடல்ல போடுங்கப்பா...