சினிமாவின் பரபரப்பை, ஆடம்பரத்தை முதலில் வெறுத்தவர், இதுதான் தனது தொழில், தனது வாழ்க்கை என்றான பிறகு நடிப்பையும், தொழிலையும் நேசிக்க ஆரம்பித்தார். எந்தத்துறையில் ஈடுபட்டாலும் அதில் முதலாவதாக, சிறந்தவராக இருக்க வேண்டும் என்ற அவரது இயல்பான முனைப்பு அவரை முன்னணி கலைஞராக்கியது.
ஆங்கிலம், இந்தி, கன்னட, தெலுங்குப் படங்களில் நடித்த பிறகே ஜெயலலிதாவின் தமிழ் திரைப்பிரவேசம் நிகழ்ந்தது. 1965 -இல் வெளியான வெண்ணிற ஆடை திரைப்படம் ஜெயலலிதாவின் அறிமுகத்தால் என்றென்றும் மறக்காத அழியா புகழ்பெற்றது. 1965 -இல் அவர் நடித்த சந்திரோதயம் திரைப்படம் தமிழின் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதை பெற்றுத் தந்தது. இரட்டை வேடங்களில் அவர் நடித்த யார் நீ? திரைப்படம் அவரது நடிப்புத் திறமைக்கு சான்றாக உள்ளது. பல விருதுகளை இந்தப் படம் அவருக்கு பெற்றுத் தந்தது.
ஜெயலலிதா வரும்போது ஒரு தேவதை வருவது போலிருக்கும் என்று கூறியுள்ளார் சரோஜாதேவி. ஆண்களைவிட பெண்கள் அவரது தோற்றப்பொலிவில் அதிகம் வசீகரிக்கப்பட்டனர். அவரது குரல்வளமும் அபாரமானது. அடிமைப்பெண் திரைப்படத்தில் அவர் பாடிய, அம்மா என்றால் அன்பு, சூரியகாந்தி திரைப்படத்துக்காக பாடிய ஓ தில் ரூபா உள்ளிட்ட பாடல்கள் இன்றும் அவரது இனிமையான குரலுக்கு சான்றாக உள்ளன.