சங்கடஹர சதுர்த்தி செவ்வாய் கிழமைகளில் வருவதால் என்ன சிறப்புக்கள்...?

செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (12:15 IST)
சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, விநாயகர் படத்திற்கு விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும்.


மாலையில் கோவிலுக்கு சென்று அருகம்புல் மாலை சாற்றி வழிபட வேண்டும். இரவில் உதயமாகும் சந்திரனை தரிசித்து வழிபாடு செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்த விரதத்தை கடைபிடித்து அங்காரகன் என்னும் செவ்வாய் நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை பெற்றான். எனவே செவ்வாய் கிழமைகளில் வரும் சதுர்த்தி அங்காரக சதுர்த்தி என்று போற்றப்படுகின்றது. அன்றைய தினம் விநாயகரை வழிபடுவதால் செவ்வாய் பகவானின் அருளும் கிடைக்கும்.

விநாயகரின் பெயரையாவது இடைவிடாது அன்று முழுவதும் ஜெபிக்கவேண்டும். உபவாசம் இருப்பதும் நன்று. இரவு சந்திரோதயம் ஆன உடன் சந்திரனை பார்த்துவிட்டு, அர்க்கியம் விட்டு பிறகு பூஜையை முடித்து சாப்பிட வேண்டும். அன்று விநாயக புராணத்தை பாராயணம் செய்வதும் நன்மை பயக்கும்.

இந்த விரதத்தை விநாயக சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தியில் இருந்து மகா சங்கடஹர சதுர்த்தி வரை உறுதியுடன் கடைப்பிடித்தால் எல்லா நலன்களும் கிடைக்கும்.

கோசாரப் பலன்களை அருளும் சந்திர பகவான் விநாயகரின் அருள்பெற்றதால், சந்திர பகவானின் நற்பலனாக, நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் தடங்கல்கள் நீங்கும்.

செவ்வாய் பகவான் வழிபட்டதால், அங்காரக (செவ்வாய்) தோஷ பாதிப்புகள் நீங்கித் திருமணத் தடைகள் நீங்கும். நல்ல மங்கலமான நல்வாழ்வு அமையும். சனி பகவானின் தோஷம் நீங்குவதால், ஆயுள் அபிவிருத்தி, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்