காதலித்த பெண்ணை பெண் கேட்டு தராததால் ஆத்திரத்தில் பெண்ணின் தாயை கத்தியால் சரமாரியாக குத்திய இளைஞர்!

J.Durai

வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (09:14 IST)
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கோசவன்பேட்டை காமாட்சி நகரை சேர்ந்தவர் சிவபாலசாமி. 
 
நெசவு தொழிலாளியான இவரது மனைவி சந்திரகுமாரி (38). இவர்களது 19 வயது மகள் சென்னை தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். 
 
இன்று காலை குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற போது இளைஞர் ஒருவர் வீட்டிற்கு வந்து அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார். அப்போது கல்லூரி மாணவியும் தானும் காதலிப்பதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் அந்த இளைஞரை பிறகு வந்து பேசிக் கொள்ளுமாறு அங்கிருந்து அப்புறப்படுத்தி அனுப்பி வைத்தனர். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது வீட்டில் சந்திரகுமாரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி சென்றபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சந்திரகுமாரி கிடந்துள்ளார்.
 
அப்போது ஜன்னல் வழியே பார்த்த போது இளைஞரும் வீட்டிற்குள் இருந்துள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த சந்திரகுமாரியை மீட்டு பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
தொடர்ந்து இளைஞரை பிடித்து நடத்திய விசாரணையில் அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்த பரத் என்பதும் சந்திரகுமாரியின் மகள் படித்த கல்லூரியில் படித்ததாகவும் அவரது மகளை காதலித்ததாக தாயிடம் கூறிய போது அதற்கு ஒப்புக் கொள்ளாததால் கத்தியால் சந்திரகுமாரி குத்தியது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அந்த இளைஞரை பெரியபாளையம் காவல் நிலையம் கொண்டு சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிலிருந்த பெண் சரமாரியாக குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்