இந்திய - வங்கதேச எல்லையில் தெற்கு வங்க எல்லை பகுதிக்குட்பட்ட டாராலி எல்லை சாவடியில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது 16.55 கிலோகிராம் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து, ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக துணை ராணுவ படை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
143வது பட்டாலியன் வீரர்கள், ஒரு வேனை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது, மரத்தால் ஆன அந்த வாகனத்தின் ரகசிய பகுதிக்குள் பழுப்பு நிற டேப்பால் சுற்றப்பட்ட 16 பொட்டலங்களை கண்டுபிடித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர் பால்டி கிராமத்தை சேர்ந்த இந்தியர் என்பது தெரியவந்துள்ளது. அவர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இந்திய வங்கதேச எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.