உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது

திங்கள், 15 ஜனவரி 2018 (11:28 IST)
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஆனால் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தி பெற்றவை. நேற்று அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து, மாட்டுப் பொங்கலான இன்று மதுரை பாலமேட்டில் கோலாகலமாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் மற்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் இன்று காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். பாலமேடு ஜல்லிக்கட்டில் 1,002 காளைகளும், 1,188 மாடுபிடி வீர்ர்களும் பங்கேற்கின்றனர். பாலமேட்டில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 
 
ஜல்லிக்கட்டை முன்னிட்டு 10 மருத்துவக் குழு, 12 கால்நடை மருத்துவக் குழு, மேலும் காயம் ஏற்படுபவர்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற 4 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளன. நாளை அலங்கநல்லூரில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டை தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னின்று நடத்த உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்