ஆடையை கிழித்த பக்கத்து வீட்டு பெண் ; அவமானம் தாங்காமல் பெண் தற்கொலை

திங்கள், 23 அக்டோபர் 2017 (13:25 IST)
பக்கத்துவிட்டுப் பெண்ணுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
புதுவண்ணாரப்பேட்டை எம்.பி.டி, குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் லோகேஸ்வரன். இவரின் மனைவி திவ்யா (39). இந்த தம்பதிக்கு 5 வயதில் ரக்‌ஷிதா என்கிற பெண் குழந்தை உள்ளது.
 
அந்நிலையில், பக்கத்து விட்டில் வசிக்கும் நாகம்மாள் என்பவரிடம், ரேஷன் கார்டு வாங்கி கொடுப்பதற்காக திவ்யா ரூ.6 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால், கூறியபடி அவர் ரேஷன் கார்டை வாங்கித் தரவில்லை. எனவே, நாகம்மாளிடம் திவ்யா பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால், நாகம்மாள் ரூ.3 ஆயிரத்தை மட்டுமே கொடுத்துள்ளார். மீதி பணத்தை தரவில்லை.
 
இது தொடர்பாக நேற்று முன்தினம் மாலை திவ்யாவிற்கும், நாகம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில், திவ்யாவின் ஆடை கிழிந்தது.
 
இதனால் அவமானம் அடைந்த திவ்யா, வீட்டிற்குள் சென்று துக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
 
இதையடுத்து, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்