பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை! – அருப்புக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்!

வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (09:41 IST)
அருப்புக்கோட்டை அருகே பெண் ஒருவரை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவர் தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு சொந்த ஊர் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்றுள்ளார். அப்போது அப்பகுதி வழியாக காரில் வந்த பெண்ணுக்கு வேண்டப்பட்ட ஒருவர் பெண்ணை ஊரில் விட்டுவிடுவதாக காரில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.

செல்லும் வழியில் காரை நிறுத்திய அந்த நபர் அந்த பெண்ணுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது பைக் மற்றும் காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் திடீரென நின்று கொண்டிருந்த அந்த நபரை தாக்கிவிட்டு அந்த பெண்ணை கடத்திக் கொண்டு சென்றுள்ளனர். பெண்ணை கடத்தி செல்வதை பார்த்த ஒருவர் இதுகுறித்து போலீஸாருக்கு புகார் அளித்துள்ளார்.

அதற்குள்ளாக அந்த பெண்ணை வேறு இடத்திற்கு கொண்டு சென்ற அந்த கும்பல் அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. பின்னர் மீண்டும் காரில் ஏற்றி கடத்தியே இடத்திலேயே தள்ளிவிட்டு விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து அந்த பெண் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று டாக்டர்களிடம் கூறியுள்ளார். அவருக்கு உடனடி சிகிச்சைகள் அளிக்கப்பட்டதுடன் போலீஸிலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உடனடி ஆய்வை மேற்கொண்ட போலீஸார் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகள் 5 பேரை கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவன் ஆவான். மேலும் தப்பி தலைமறைவான இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்