மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் எப்போது நிறைவடையும்.? நிதின் கட்கரி முக்கிய அப்டேட்.!

Senthil Velan

வியாழன், 25 ஜூலை 2024 (22:21 IST)
சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் ஜூன் 2026ல் நிறைவடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 
 
பெருகிவரும் சென்னை போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகவும், சென்னை துறைமுகத்திலிருந்து கண்டெய்னர் சரக்கு லாரி போக்குவரத்து தடையின்றி செல்வதற்காகவும் கடந்த 2009-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம்.
 
கிடப்பில் போட்ட அதிமுக:
 
பறக்கும் சாலைத்திட்டத்தின் 15% பணிகள் முடிவடைந்த நிலையில், 2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சராக பதவி ஏற்ற ஜெயலலிதா,  கூவம் நதியில் அமைக்கப்படும் பறக்கும் சாலை திட்டத்தால் நதியின் நீரோட்டம் பாதிக்கப்படும், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனக் கூறி பறக்கும் சாலைத் திட்டத்துக்குத் தடை ஏற்படுத்தினார்.
 
மீண்டும் கையிலெடுத்த திமுக:
 
2021-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க தலைமையில் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்றார். அதையடுத்து, மே 16, 2022-ம் ஆண்டு மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ் நாடு அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுகக் கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது. 
 
பிரதமர் மோடி அடிக்கல்:
 
அதன்படி 20.56 கி.மீ நீளத்துக்கு, ரூ.5,855 கோடி செலவில் பறக்கும் சாலைத் திட்டத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவது உறுதியானது. அதைத் தொடர்ந்து, 2022 மே 26-ம் தேதி தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி, பறக்கும் சாலைத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் பணிகள் துவங்கப்பட்டன. கீழ் அடுக்கில் உள்ளுர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் இதன் திட்டம் உருவாக்கப்பட்டது.
 
மாதிரி படம்:
 
சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே அமைக்கப்படும் பறக்கும் சாலைக்கான மாதிரி படத்தை, கடந்த வருடம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விட்டரில் வெளியிட்டபோது, அந்த படம் பலரது கவனத்தையும் அப்போது பெற்றிருந்தது.
 
ஜூன் 2026ல் நிறைவு:
 
சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் ஜூன் 2026ல் நிறைவடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாகவே கிடப்பில் போடப்பட்ட திட்டம் ஈரடுக்கு சாலையாக மாற்றப்பட்டது என்றும், இந்த பறக்கும் சாலைத் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்