தமிழகத்தை பிடித்துள்ள திராவிட மாடல் என்ற சாவக்கேடு எப்போது முடியும் - மதுரை மத்திய சிறையில் இருந்து வெளிவந்த யூடியூப்பர் சவுக்கு சங்கர் பேச்சு...

J.Durai

வியாழன், 26 செப்டம்பர் 2024 (09:21 IST)
பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 
அவர் மீது வேறு  குற்றச்சாட்டுகளுக்காகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 
 
இதனையடுத்து சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
 
அதேநேரத்தில், அவர் கஞ்சா வைத்து இருந்ததாகவும் அவர் மீது மேலும் சில வழக்குபதிவு செய்யப்பட்டது. இதில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் இரண்டாவது முறையாக தேனி போலீசார் கைது செய்தனர்.
 
இதனை எதிர்த்து அவரது தாயார், உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அப்போது, தமிழக அரசு , ''சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை மறுபரிசீலனை செய்த அறிவுரைக் கழகம், அதனை ஏற்றுக்கொள்ள வில்லை. இதனால், குண்டர் சட்டத்தை திரும்ப பெற்று கொள்கிறோம் ''என விளக்கம் அளித்தது.
 
இதனையடுத்து, சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த நீதிமன்றம், அவருக்கு எதிராக வேறு வழக்குகள் நிலுவையில் இல்லை என்றால், அவரை உடனடியாக ஜாமினில் விடுதலை செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டதுடன் வழக்கை முடித்து வைத்தனர்.
 
இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் உள்ள யூட்யூபில் சவுக்கு சங்கர் ஜாமினில் வெளியில் வந்தார்
 
மதுரை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த யூடியூப்பர்  சவுக்கு சங்கர் செய்தியாளர்களை சந்தித்தபோது: 
 
என் மீது பொய்யாக கஞ்சா வழக்கு போடப்பட்டு  பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் போலீசாரால் அலைக்கழிக்கப்பட்டேன்.  கோவை சிறையில் எனது வலது கையை மூன்று இடங்களில் எலும்புகள் உடைத்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 
 
ஒவ்வொரு முறையும்  காவல்துறையினர் என்னை கஸ்டடியில் எடுக்கும் போது திமுக அரசிற்கு எதிராக எதுவும் பேசக்கூடாது, திமுக அரசுக்கு ஆதரவாக பேச வேண்டும் என நிபந்தனையாக கூறினார்கள். 
 
இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் உடனடியாக உங்களை விடுவிப்போம் அதை மீறினால் நாங்கள் ஒரு வருடத்திற்கு உங்களை சிறையிலிருந்து விடமாட்டோம் என கடுமையாக நெருக்கடி கொடுத்தார்கள்.
 
நான் உண்மைகளை பேசுவதற்கு என்றும் அஞ்ச மாட்டேன் என பதில் அளித்ததன் காரணமாக மூன்று மணிக்கு சென்னை புழல் சிறையில் இருந்து மதுரை மத்திய சிறையில் இரண்டாவது முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் என்னை கைது செய்தார்கள்.தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விமர்சனங்களை சந்தித்தவர் அல்ல.  தந்தையின் நிழலில் வளர்ந்த ஒரு போன்சாய் செடி தான். மு க ஸ்டாலின். 
 
பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் இறந்தால் கருணையின் அடிப்படையில் பதவி வழங்குவார்கள் . அது போலத்தான் திமுக தலைவரும் தற்போது முதல்வராகவும் மு க ஸ்டாலின் வந்திருக்கிறார். 
 
சவுக்கு மீடியா எட்டு மாதங்களாக வெளிவந்ததன் காரணமாகத்தான் சவுக்கு மீடியாவின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டும் அலுவலகம் சீல் இடப்பட்டது. வீடுகளும் சீல் இடப்பட்டுள்ளது. எனது தாயாரின் பென்ஷனும் முடக்கப்பட்டுள்ளது.
 
நாட்டில் நடக்கும் எந்தவித உண்மையும் வெளிவந்து விடக்கூடாது என்பதற்காக முதல்வரும் உதயநிதி ஸ்டாலினும் மிக கவனமாக இருக்கிறார்கள். சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் விவகாரம் அனைவருக்கும் தெரியும். 
 
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மாற்ற வேண்டும் என பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு அந்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ளது.
 
கடந்த 2023 டிசம்பரில் தமிழக டிஜிபி சங்கர் ஜி வால் தமிழகத்தில் சட்டவிரோதமாக மெத்தனால் சர்வ சாதாரணமாக கிடைக்கும் நிலையில் அதை தடுக்க வேண்டும். அதை தடுக்கவில்லை என்றால் மரக்காணத்தில் ஏற்பட்டதை போன்று மீண்டும் நடைபெறும் என தமிழக உள்துறை அமைச்சருக்கு சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு டிசம்பரில் கடிதம் எழுதி இருக்கிறார்.
 
இந்த கடிதத்தின் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்திருந்தார் என்றால் 66 உயிர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உயிர் இறந்து இருக்காது. இதுபோன்ற உண்மைகள் மக்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக சவுக் மீடியா முடக்கப்பட்டது. 
 
நான்கு நாட்களுக்கு முன்பாக தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாஆசீர்வாதம் பாஸ்போர்ட் வழக்கு குறித்து பத்திரிகையாளர் எழுதியதற்கு அவரை கைது செய்துள்ளனர். 
 
சவுக்மீடியாவில் பணியாற்றிய நபர்கள் மீது கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதியப்படும் என மிரட்டி இருக்கிறார்கள். இது தனிநபருக்கு நடந்த கொடுமையாக பார்க்க கூடாது ஊடக சுதந்திரத்திற்கு ஏற்பட்ட கொடுமையாக தான் பார்க்க வேண்டும் 
ஐந்து மாதத்திற்கு பிறகு சிறையில் இருந்து வெளி வந்திருக்கிறேன்.
 
எனது அலுவலகம் முடக்கப்பட்டு இருக்கிறது ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதை நம்பி இருந்தோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. 
 
ஏற்கனவே இருந்த வீரியத்தை போன்று மீண்டும் செயல்படுவேன் மக்களுக்கு எடுத்துரைக்கும் எந்த ஒரு விஷயத்திற்கும் சவுக்கு மீடியா தயங்காது. எனது கையை கோவை சிறையில் வைத்து உடைத்தார்கள் தமிழகத்தில் பத்திரிக்கை சுதந்திரம் என்பது துளியும் இல்லை. தமிழக முதல்வராக இருந்த கலைஞர் தன்னை பத்திரிக்கையாளர் என கூறிக் கொள்வதில் பெருமைப்பட்டவர். 
 
ஆனால் ஸ்டாலின் பத்திரிக்கையாளர் சுதந்திரத்தையும் குரல் வளையையும் நெருக்குவதில் முன்னணியில் இருக்கிறார். தமிழகத்தில் பத்திரிக்கை சுதந்திரம் இல்லாமல் ஒரு அவல நிலை உள்ளது. தமிழகத்தை பிடித்துள்ள திராவிட மாடல் என்ற சாவக்கேடு எப்போது முடியும் என மக்கள் காத்திருக்கிறார்கள் என்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்