ஆர்.கே.நகரில் காங்கிரஸ் போட்டியிடுமா?: ஈவிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்

வெள்ளி, 29 மே 2015 (15:26 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
 

 
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறும்போது, "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படமாட்டோம். தேர்தலை நேர்மையாக நடத்துவோம் என தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்தால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிப்போம்.
 
ஜூன் 3ல் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அன்றைய கூட்டத்தில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இறுதி முடிவு எட்டப்படும்" என்றார்.
 
சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 3ஆம் தேதி தொடங்குகிறது. முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவார் என்பதால் இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
 
திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்.கே.நகர் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. தமிழக பாஜக இன்னும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. இந்நிலையில், தேர்தல் ஆணையம் உத்தரவாதத்தைப் பொறுத்தே தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிப்போம் என இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்