இதனால்தான் ராதாரவியை நீக்கினோம் - நீதிமன்றத்தில் விஷால் விளக்கம்

வெள்ளி, 22 டிசம்பர் 2017 (16:39 IST)
நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து நடிகர் ராதாரவியை நீக்கியதில் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை என நடிகர் விஷால் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

 
2015ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்று பதவிக்கு வந்ததும், ராதாரவி, சரத்குமார் உட்பட சில பழைய நிர்வாகிகள் ஊழலில் ஈடுபட்டிருப்பதாக் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொண்டனர். இதை எதிர்த்து முன்னாள் செயலாளரான ராதாரவி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், முன்னாள் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத்தடை விதித்தனர்.  
 
ஆனால், சமீபத்தில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில், ராதாரவி உள்ளிட்ட சிலரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கினார் விஷால். இது நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி வழக்கு தொடர்ந்தார் ராதாரவி. இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் டிசம்பர் 19ம் தேதி விஷால் ஆஜராகவில்லை. 
 
விஷாலுக்கு காய்ச்சலாக இருப்பதால், 21ஆம் தேதி வரை ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாக விஷாலின் வழக்கறிஞர் தெரிவித்தார். அதனை ஏற்று விசாரணை ஒத்திவைத்த நீதிமன்றம், 22ம் தேதி (இன்று) விஷால் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 
 
இதனையடுத்து, இன்று நீதிமன்றத்திற்கு வந்த விஷால் “சங்க பொதுக்குழுவில் ராதாரவியை நீக்க அனைவரும் ஒரு மனதாக முடிவெடுத்ததாகவும், இதில் நீதிமன்றத்தை மீறும் எண்ணம் எதுவுமில்லை” எனவும் நீதிமன்றத்தில் விளக்கமளித்தார். 
 
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை வரும் ஜனவரி 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும், அடுத்த கட்ட விசாரணைகளில் ஆஜராவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்குமாறு விஷால் வைத்த கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்