காங்கிரஸ் பிரமுகர் திருநாவுக்கரசர், நடிகர் விஜய்க்கு நல்ல மனதும், உதவி செய்யும் எண்ணமும் இருப்பதாக கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருச்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதை தொடங்கி வைத்த திருநாவுக்கரசர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது, "கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன், ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனது தொகுதியில் சகோதரர் துரை வைகோ போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு எனது வாழ்த்துக்கள். ஆனால், வருகிற சட்டமன்ற தேர்தலில் திருச்சியில் போட்டியிடுவேன்," என்று தெரிவித்தார்.
விஜய் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "விஜய் நிறைய சம்பாதிக்கிறார். அதேபோல, அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனதும் இருக்கிறது. அதனால்தான் மாணவ மாணவிகளுக்கு விழா நடத்தி பரிசு அளிக்கிறார். இது நல்ல விஷயம்தான். காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி என அனைவரும் புகழ்பெற்றே வாழ்ந்துள்ளனர். அதேபோல், விஜய்யை காமராஜருடன் ஒப்பிட்டுப் பேசியதை பெரிதுபடுத்த வேண்டாம். ஆனால், அதே நேரத்தில் அவர்களுக்கு நிகர் அவர்கள் மட்டுமே," என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.