பொற்கால ஆட்சி மலர்கிறது… மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பூரிப்பு!

ஞாயிறு, 2 மே 2021 (18:45 IST)
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணீ ஆட்சி அமைக்க உள்ள நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘திராவிட இயக்கத்தை, நம் அன்னைத் தமிழைக் கப்பி இருந்த காரிருள் நீங்கி, உதயசூரியன் ஒளியுடன் தமிழ்நாட்டுக்கு விடிவு பிறந்து உள்ளது. வட ஆரிய சக்திகளின் ஆதிக்கத்திற்கு, தமிழ் மண்ணில் இடம் இல்லை என்ற முழக்கம் விண் அதிர எங்கும் எதிரொலிக்கின்றது. வெற்றியைத் தவிர வேறு இல்லை என்று, திராவிட இயக்க உணர்வாளர்கள் பூரித்து மகிழ்கின்றனர். அன்புச் சகோதரர், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொற்கால ஆட்சி மலர்கின்ற நிலை உருவாகி இருப்பதை எண்ணி மகிழ்கின்றேன்.

வெற்றிகள் தொடரட்டும்; பணிகள் தொடங்கட்டும்; தொடர்ந்து நிகழட்டும்; புதிய வரலாறு படைக்கட்டும் என இந்தப் பொன்னான வேளையில், என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.  நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகின்றேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உறுதுணையாக இருக்கும். ஆட்சி மாற்றத்திற்கு வாக்கு அளித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.’ எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்