காலை பிடித்து, காலையும் வாரி விட்டாச்சு - எடப்பாடியாரை வம்பிற்கு இழுத்த உதயநிதி!

செவ்வாய், 23 மார்ச் 2021 (11:02 IST)
காலை பிடித்து ஆட்சிக்கு வந்தவர், அவரது காலையும் வாரி விட்டார் என எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின். 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரியில் பேசிய அவர் “ஊர்ந்து சென்று முதல்வராக நான் என்ன பாம்பா? பல்லியா? நடந்து சென்றுதான் முதல்வர் ஆனேன் என முன்னர் கூறினார். 
 
இது குறித்து திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் தனது சமீபத்திய பிரச்சார கூட்டத்தில், தலைவர் கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்தார். அதன்பிறகு ஜெயலலிதா முதலமைச்சராக வந்த பிறகும் நீட் தேர்வு வரவில்லை.
 
ஆனால் தமிழகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய 2 அடிமைகள் சேர்ந்து மோடியிடம் பேசி தமிழகத்தில் நீட் தேர்வை கொண்டு வந்துவிட்டனர். தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் எடப்பாடி அடகு வைத்து விட்டார். இனியும் ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டை விற்றுவிடுவார்.
 
இவர் எப்படி முதல்வர் ஆனார்? தரையில் படுத்து ஊர்ந்து சென்றுதான். தமிழகம் எங்கு வெற்றிநடைபோடுகிறது என்பது இதை பார்த்தால் நமக்கு தெரியும். சசிகலாவின் டேபிள், சேர்களுக்குதான் அது தெரியும். காலை பிடித்து ஆட்சிக்கு வந்தவர், அவரது காலையும் வாரி விட்டார். இப்போது நான் என்ன பல்லியா? பாம்பா? என கேட்கிறார். அவர் என்னவென்று சசிகலாவுக்குத்தான் தெரியும் என நக்கல் அடித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்