பதவி ஏற்கிறார் டிடிவி தினகரன்: கட்டாயம் கலந்துகொள்ள கட்சியினருக்கு அழைப்பு!

வியாழன், 23 பிப்ரவரி 2017 (10:16 IST)
தமிழக முதல்வராக ஆசைப்பட்ட அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாகி சிறைக்கு செல்ல அவரது அக்கா மகன் தினகரனை கட்சியில் அவசரமாக சேர்த்து உடனேயே துணை பொதுச்செயலாளர் பதவியையும் வழங்கினார்.


 
 
தான் சிறைக்கு சென்றாலும் கட்சி தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகவே தினகரனை கட்சியில் சேர்த்து அன்றே துணை பொதுச்செயலாளராக்கினார் சசிகலா என அதிமுக வட்டாரத்திலேயே பேசுகிறார்கள்.
 
இந்நிலையில் சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்துவிட்டு வந்த தினகரன் இன்று அதிமுக தலைமை கழகத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இன்று பகல் 12 மணிக்கு நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என அனைவருக்கும் முன் கூட்டியே தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
 
பொதுவாக கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுபவருக்கு மட்டுமே இப்படி பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். துணை பொதுச்செயலாளருக்கு எல்லாம் பதவியேற்பு நிகழ்ச்சி நடக்காது. ஆனால் தற்போது தினகரன் தான் கட்சியில் எல்லாமே என்பதை காட்டுவதற்குதான்  இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்