அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி அமைப்பதற்கு பதிலாகத் தூக்கில் தொங்கிவிடலாம் என்று கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கட்சிகளிடையேயான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, அ.தி.மு.க.வில் பிரிந்து சென்ற தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா போன்றோர் மீண்டும் கட்சிக்குள் இணைய வேண்டும் என்று முயற்சித்து வருகின்றனர். ஆனால், எந்த காரணம் கொண்டும் பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். இந்த சூழலில், "எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்" என்று டி.டி.வி. தினகரன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன், "எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாகத் தூக்கில் தொங்கிவிடலாம்" என்று ஆவேசமாகக் கூறினார். மேலும், தங்கள் கட்சி இருக்கும் கூட்டணிதான் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். எந்த கூட்டணியில் இணைவது என்பது குறித்த அறிவிப்பு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.