ஜிகா வைரஸ் குறித்த அச்சம் வேண்டாம் : மா.சுப்பிரமணியன்

வெள்ளி, 9 ஜூலை 2021 (15:31 IST)
மக்கள் ஜிகா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

 
மெல்ல மெல்ல கொரோனா குறைந்து வரும் நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸ் தலைகாட்டி இருப்பது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆம், கேரளாவை சேர்ந்த 24 வயது கர்ப்பிணிக்கு  ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
 
இந்நிலையில், கேரள மாநிலத்தில் கர்ப்பிணியை தொடர்ந்து மேலும் 14 பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. திருவனந்தபுரத்தில் புதிதாக ஜிகா கண்டறியப்பட்ட 14 பேரில் பெரும்பாலானவர்கள் சுகாதார ஊழியர்கள் என்று தெரிய வந்துள்ளது.
 
ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதால் ஜிகா வைரஸ் பரவுகிறது. காய்ச்சல், தோலில் சொறி, மூட்டு வலி, தலைவலி உள்ளிட்டவை ஸிகா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாகும். 1947 ஆம் ஆண்டு உகாண்டா காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஜிகா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனிடையே, தமிழக மக்கள் ஜிகா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை சேர்ந்த கர்ப்பிணி மகப்பேறு மருத்துவமனையில் நன்றாக உள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்