தமிழக முக்கிய அமைச்சர் பதவி நீக்கம்: முதல்வர் பழனிச்சாமி அதிரடி நடவடிக்கை

புதன், 7 ஆகஸ்ட் 2019 (22:11 IST)
தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் சற்றுமுன் விடுவிக்கப்பட்டார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரையை ஏற்று அமைச்சரவையில் இருந்து மணிகண்டனை விடுவித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் அதிரடியாக நீக்கப்பட்டதை அடுத்து அவரது பொறுப்பை  வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கேபிள் விவகாரம் தொடர்பாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு எதிராக இன்று  காலை மணிகண்டன் பேட்டி அளித்ததாகவும், இதன் காரணமாகவே அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் நீக்கப்பட்டிருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
 
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மணிகண்டன், அரசு கேபிள் டி.வி நிறுவன தலைவராக இருக்கும் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் தன்னிடம் உள்ள 2 லட்சம் கேபிள் இணைப்புகளை அரசு கேபிள் நிறுவனத்தில் இணைக்க வேண்டும் என கூறியிருந்தார். அவருடைய இந்த பேட்டி பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்