டாக்டர் ஆனார் எடப்பாடி பழனிச்சாமி: துணை முதல்வர் வாழ்த்து!

ஞாயிறு, 20 அக்டோபர் 2019 (17:51 IST)
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள நிகர்நிலை பல்கலைக் கழகமான டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது
 
டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவன வேந்தர் ஏசி சண்முகம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். இதனையடுத்து டாக்டர் பட்டம் பெற்ற முதல்வருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து கூறினர். 
 
டாக்டர் பட்டம் பெற்ற பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிறப்புரையாற்றினார் அவர் பேசியதாவது: இந்த விழாவில் பட்டம் பெற்ற அனைத்து மாணவ மாணவிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். மனித சமுதாயத்திற்கு மாணவர்கள் பணியாற்ற உறுதி ஏற்கவேண்டும். மாணவர்களுக்கு கனிவு, பணிவு, துணிவு தேவை. ஒழுக்கம், நீதி போதனை போன்றவற்றை அறிந்தவனே முழுமையான மனிதனாக வாழ முடியும். முயற்சி திருவினையாக்கும். முயன்றால் எதையும் சாதிக்க முடியும் 
 
டாக்டர் பட்டம் பெற்றதால் எனது பொறுப்பு கூடியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 6 சட்டக் கல்லூரிகளை அதிமுக அரசு தொடங்கியுள்ளது. பள்ளிக்கல்வித்துறைக்கு என ரூபாய் 78 ஆயிரத்து 900 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 1,800 கோடி செலவில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது’ என்று கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்