சசிகலா, தினகரனுக்கு எதிராக பேசியதால் அதிமுக எம்பிக்கு செருப்படி, கொலை மிரட்டல்!

புதன், 28 ஜூன் 2017 (16:09 IST)
அதிமுக எம்பி கோ.அரி நேற்று திருத்தணியில் செய்தியாளர்களை சந்தித்த போது அதிமுகவில் இருந்து சசிகலா மற்றும் தினகரனை விலக்க வேண்டும் என கூறினார். இதனால் அவரது படத்துக்கு செருப்படியும், அவருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.
 
கோ.அரி நேற்றைய பேட்டியில், சசிகலாவையும், தினகரனையும் ஒதுக்கிவைப்பதில் அதிமுகவில் ஒருமித்த கருத்து நிலவுகிறது. தம்பிதுரை தனது சொந்த கருத்துக்களை கூறி அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். சசிகலா குறித்து தம்பிதுரை கூறியது அவரது சொந்த கருத்து என அவர் கூறினார்.
 
இதற்கு தினகரன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எம்பி கோ.அரிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எம்பி அரி திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இந்நிலையில் அரக்கோணத்தில் எம்பி கோ.அரியின் புகைப்படத்துக்கு செருப்படி கொடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர் அதிமுகவினர். அந்த ஆர்பாட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவினர் எம்பியை ஒருமையில் பேசியதோடு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். கோ.அரி அரக்கோணம் தொகுதி எம்பியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்