திருமுருகன் காந்தியை இதற்காகத்தான் கைது செய்தோம்: எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்!

வெள்ளி, 7 ஜூலை 2017 (09:23 IST)
மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்ட சிலரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது தமிழக அரசு. இலங்கையில் இறுதி போரில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் செய்ய மெரினாவுக்கு சென்ற திருமுருகன் காந்தி உள்ளிட்டவரை தமிழக காவல்துறை குண்டன்ர் சட்டத்தின் கீழ் கைது செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.


 
 
அஞ்சலி செலுத்த சென்றவர் மீது ஏன் குண்டர் சட்டத்தை ஏவ வேண்டும் என பல அரசியல் கட்சியினர் குரல் எழுப்பி அவரை விடுதலை செய்ய வலியுறுத்தினர். ஆனால் தமிழக அரசு தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரது விடுதலையை தடுத்தனர்.
 
இந்நிலையில் சட்டசபையில் நேற்று காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, திமுக எம்.எல்.ஏ அன்பழகன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஏன் கைது செய்யப்பட்டார் என்று கேள்வி எழுப்பினார்.
 
அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தடை செய்யப்பட்ட இடம் என்று தெரிந்தும் அங்கு போராடியதால் தான் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். மேலும் திருமுருகன் காந்தியை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே காவல் துறையினர் கைது செய்தனர் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்