நடிகைகளை கேவலமாக பேசிய திருமா! – வலுக்கும் எதிர்ப்புகள்!

புதன், 20 நவம்பர் 2019 (14:04 IST)
நடிகை காயத்ரி ரகுராம் உடனான வி.சிகவினர் மோதல் குறித்து பேசிய திருமா ஒட்டுமொத்தமாக நடிகைகளை தவறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்து மதம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை காயத்ரி ரகுராம் திருமாவை இழிவாக பேசி தனது ட்விட்டரில் பதிவிட்டார். இதனால் விசிகவினருக்கும், காயத்ரி ரகுராமுக்குமிடையே மோதல் எழுந்தது. விசிகவினர் காயத்ரி வீட்டு வாசலில் அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் இதற்கெல்லாம் தான் அஞ்ச போவதில்லை என காயத்ரி தெரிவித்திருந்த நிலையில் அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இந்நிலையில் மக்களவை கூட்டத்திற்காக டெல்லி சென்ற திருமா விசிகவினருக்கு வீடியோ அழைப்பில் பேசியுள்ளார். அதில் அவர் ”மோடி போன்ற பெரிய சக்திகளை எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த சின்ன பதர்களை கணக்கில் கொள்ளாதீர்கள். குடித்து விட்டு கார் ஓட்டுகிற, பெண்களை வைத்து தொழில் செய்கிற தற்குறிகளுக்கு என்ன தெரியும்? ஆடைகளை அவிழ்த்து போட்டு நடிப்பது அவர்கள் தொழில். அதை அவர்கள் கலை என்றும் சொல்லலாம். இதுபோன்றவர்களுக்கு பதில் சொல்லி காலத்தை வீணடிக்க வேண்டாம்” என்று பேசியுள்ளார்.

அவர் அதில் காயத்ரி ரகுராம் பெயரை குறிப்பிடாமல் பேசியிருந்தாலும் அவரது பேச்சு ஒட்டுமொத்தமாய் நடிப்பு தொழிலில் இருக்கும் பெண்களை இழிவுப்படுத்துவதாக உள்ளது என புகார் எழுந்துள்ளது. பல்வேறு மகளிர் அமைப்புகள் திருமாவின் இந்த பேச்சை கண்டித்துள்ளன. இதனால் திருமாவளவன் பேச்சு மேலும் சர்ச்சையாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்