சுவாதி கொலையில் திருமாவளவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது - எச்.ராஜா அடுத்த குண்டு

திங்கள், 18 ஜூலை 2016 (23:56 IST)
சுவாதி எதற்காக மதம் மாற நினைத்தார்? அவரை மதம் மாற சொன்ன பையன் யார்? இவையெல்லாம் திருமாவளவனுக்கு தெரிந்திருக்கிறது பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
 

 
இது குறித்து கூறியுள்ள எச்.ராஜா, ’’நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொல்லப்பட்டது பற்றி பல்வேறு தகவல்களை திருமாவளவன் கூறிவருகிறார்.
 
சுவாதி முஸ்லீமாக மதம் மாற இருந்ததாக அவர் கூறி இருக்கிறார். அவருக்கு இந்த தகவலை சொன்னது யார்? சுவாதி எதற்காக மதம் மாற நினைத்தார்? அவரை மதம் மாற சொன்ன பையன் யார்? இவையெல்லாம் திருமாவளவனுக்கு தெரிந்திருக்கிறது.
 
எங்களுக்கு கிடைத்த தகவல்படி அந்த பையன் இந்துவாக மாறி சுவாதியை திருமணம் செய்ய முடிவு செய்திருந்ததாகவும் அதற்காக சைவ உணவுக்கு அவர் மாறியதாகவும் சொல்கிறார்கள்.
 
அவர் இந்துவாக மாறிவிடக்கூடாது என்பதற்காக சுவாதியை கொலை செய்துவிட்டதாக பேசுகிறார்கள். இப்போது அதை திசை திருப்புவதற்காக திருமாவளவனை பயன்படுத்துகிறார்கள் என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.
 
ராம்குமாருக்கும் திருமாவளவனுக்கும் என்ன தொடர்பு? இந்த கொலை பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது யாரும் எதுவும் பேசாத நிலையில் திருமாவளவன் புதிது புதிதாய் தகவல்களை சொல்கிறார்.
 
எனவே இந்த வழக்கில் பல உண்மைகள் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே சுவாதி கொலை தொடர்பாக போலீசார் திருமாவளவனிடம் விசாரணை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்