மர்மமாக இறந்த பெண்: கொலையாளி யார் என்று தெரியாமல் குழம்பும் காவல்துறை

வெள்ளி, 15 ஜூலை 2016 (02:50 IST)
2 குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார். கொலையாளி யார் என்று தெரியாமல் காவல்துறையினர் குழப்பமடைந்துள்ளனர்.
 

 


திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோனேரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் பாலமுருகன் (35), இவரும் புதுக்கோட்டை மாவட்டம் தென்னனூரை சேர்ந்த ராஜகோபால் மகள் நதியா (28) என்பவரும் காதலித்து கடந்த 5 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். 2 குழந்தைகளுடன் இருவரும் தா.பேட்டை அருகே உள்ள மேட்டுப்பாளையம்பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தனர். இந்நிலையில், பாலமுருகன் வேலைக்கு சென்றதை அடுத்து  குழந்தைகளுடன் வீட்டில் இருந்த நதியா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடலை பாலமுருகனின் உறவினரான வாலிபர் ஒருவர் மீட்டு, கோனேரிப்பட்டியில் உள்ள பாலமுருகன் வீட்டிற்கு காரில் கொண்டு சென்றுள்ளார். அங்கு சென்றதும், பால முருகனின் உறவினர்களிடம் உடலை ஒப்படைத்த அவர், நதியா வீட்டிற்குள் தூக்குப் போட்ட நிலையில் தொங்கினார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அவர் வழியில் இறந்து விட்டார் என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இதனால் பாலமுருகன் மற்றும் நதியாவின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, தா.பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், நதியாவின் கழுத்தில் காயம் இருப்பதையும் அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல் போனதயும் கண்டுபிடித்தனர்.  நகைக்காக நதியாவை மர்ம நபர்கள் யாராவது கொலை செய்தார்களா?, அல்லது உடலை ஒப்படைத்து விட்டு சென்ற வாலிபர் நதியாவை கற்பழித்து கொலை செய்திருக்கலாமா? என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்