படிக்காமல் டிவி பார்த்த குழந்தையை அடித்து கொன்ற தாய் - திருச்சியில் சோக சம்பவம்

செவ்வாய், 21 மே 2019 (11:47 IST)
படிக்காமல் டிவி பார்த்த காரணத்திற்காக பெண் குழந்தையை அதன் அம்மாவே அடித்து கொன்ற சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
திருச்சி அருகே உள்ள காட்டுப்புதூரை சேர்ந்தவர் பாண்டியன். தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலைபார்க்கும் இவருக்கு நித்யகமலா என்ற மனைவியும், லத்திகாஸ்ரீ என்ற 5 வயது மகளும் இருக்கின்றனர். லத்திகாஸ்ரீ ஒரு பள்ளியில் எல்கேஜி வகுப்பில் படித்து கொண்டிருந்திருக்கிறார்.
 
சம்பவத்தன்று லத்திகாஸ்ரீ படிக்காமல் டிவி பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அவர் சரியாக படிப்பதில்லை, எப்போதும் டிவி பார்த்து கொண்டே இருக்கிறார் என கோபம் கொண்ட நித்யகமலா லத்திகாவை சராமாரியாக அடித்துள்ளார் என தெரிகிறது. இதில் பலத்த காயங்களுக்குள்ளான லத்திகாஸ்ரீயை உடனடியாக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு போதிய வசதி இல்லாததால் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். ஆனாலும் லத்திகாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி கொண்டே போனதால் சேலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அந்த பிஞ்சு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
 
பெற்ற தாயே தன் குழந்தையை அடித்து கொன்ற சம்பவம் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து நித்யகமலாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்