வட மாநிலத்தவரை தாக்கி, பிரதமரை இழிவாக பேசிய நபர்! – வீடியோ வைரலான நிலையில் கைது நடவடிக்கை!

செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (13:48 IST)
தமிழ்நாட்டில் விரைவு ரயில் ஒன்றில் வடமாநில இளைஞர்களை தாக்கிய தமிழகத்தை சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில காலமாக தமிழ்நாட்டில் புலம்பெயர் வடமாநில தொழிலாளர்கள், தமிழ்நாட்டு நபர்கள் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில் இரு தரப்பிலும் பகைமை உணர்வு அதிகரிப்பதாக அஞ்சப்படுகிறது.

சமீபத்தில் ரயில் ஒன்றில் பயணிக்கும் வடமாநில இளைஞர்களை தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் தாக்கியதுடன், பிரதமர் மோடி குறித்தும் அவதூறான வார்த்தைகளை பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர், வடமாநில இளைஞர்களை தாக்கிய காஞ்சிபுரத்தை சேர்ந்த மகிமைதாஸ் என்பவரை கைது செய்துள்ளனர். இவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்து வருபவர் என தெரிய வந்துள்ளது.

மேலும் இதுபோல ஓடும் ரயிலில் தாக்குதல் நடத்தினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்