கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழந்த காவலர் குடும்பங்களுக்கு நிவாரணம்… தமிழக அரசு அறிவிப்பு

வியாழன், 20 மே 2021 (19:10 IST)
கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த 36 காவலர் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணமாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘தமிழகத்தில் கோவிட்-19 நோய்த்தொற்று பரவுதலைத் தடுக்கும் விதத்தில் அரசுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் தீவிரமாகப் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் பணியின் மூலமாக நோய்த்தொற்று ஏற்பட்டு தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். முக்கியமாக தமிழக காவல் துறையில் இதுவரை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உட்பட 84 நபர்கள் தங்களுடைய இன்னுயிரை இழந்துவிட்டார்கள்.

இதுவரை தங்கள் இன்னுயிரினை இழந்தவர்களின் 13 நபர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.3.25 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 71 நபர்களில் 36 நபர்களுக்கான முன்மொழிவுகள் பெறப்பட்டு அவர்களுக்குத் தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.9 கோடியை நிவாரணத் தொகையாக வழங்க முதல்வரால் உத்தரவிடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 35 நபர்களுக்கான முன்மொழிவுகள் பெறப்பட்டவுடன் பரிசீலித்து அவர்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்