ராகுல் ராஜினாமா செய்தால் தற்கொலை – சிதம்பரம் கருத்துக்கு தமிழிசை நக்கல் கருத்து !

ஞாயிறு, 26 மே 2019 (13:49 IST)
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் தென்னிந்திய காங்கிரஸ் தலைவர்கள் தற்கொலை முடிவுக்கு செல்வர் என ப சிதம்பரம் கூறியுள்ளார்.

17 ஆவது மக்களவைத் தேர்தலின் 350 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.

காங்கிரஸின் தோல்விக்குப் பொறுப்பேற்று பல மாநிலத் தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து இன்று காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று கூடியது. இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியைத் தான் ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால் அவரது ராஜினாமாவை காங்கிரஸ் காரியக் கமிட்டி ஏற்க மறுத்துவிட்டது.

ராகுலின் ராஜினாமாவை ஏற்காதது குறித்து காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பியபோது ‘ காங்கிரஸின் ராஜினாமாவை ஏற்றால் தென்னிந்தியாவில் பல காங்கிரஸ் தலைவர்கள் தற்கொலை செய்துகொள்வர்’ எனப் பதில் அளித்தார். இது குறித்துப் பலவிதமான கருத்துகள், விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் டிவிட்டரில் ‘ராஜிவ்காந்தி தமிழ் மண்ணில் குண்டு வெடித்து மக்கள் பதைபதைக்கும் வண்ணம் இறந்தபோது ஏன் ஒரு காங்கிரஸ்தலைவர் கூட அவர் அருகில் இல்லை என்று சிதம்பர ரகசியத்தைப் பற்றி? அப்போதே விவாதம் நடந்தது. இப்போது ஏன் தற்கொலை நாடகம்? காங். வழக்கமான ராஜினாமா நாடகத்தில் கிளைமாக்ஸ் காட்சி? தற்கொலை சீன் உபயம் திமுக?’ என கேலி செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்