திமுகவின் நிறத்தை மாற்ற சந்திரசேகரராவ் வந்துள்ளார்: தமிழிசை

திங்கள், 13 மே 2019 (18:53 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சென்னையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இன்றைய இந்த சந்திப்பின்போது மூன்றாவது அணி அமைப்பதில் திமுகவின் பங்கு எப்படி இருக்கும் என்பது குறித்த ஆலோசனை நடந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று மட்டுமே திமுக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ''நிறம் மாறும் தன்மை திமுகவுக்கு இருக்கிறது. திமுகவின் நிறத்தை மாற்றிப்பார்க்க சந்திரசேகர்ராவ் வந்துள்ளார் என்று கூறினார். மேலும், சந்திரசேகர் ராவை சந்தித்தபின் ஸ்டாலின் ஏன் செய்தியாளரை சந்திக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார்.
 
அதேபோல் ஸ்டாலின், சந்திரசேகராவ் சந்திப்பு குறித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியபோது, 'சந்திரசேகர ராவ் - ஸ்டாலின் சந்திப்பு நாட்டின் நலன் கருதி இருக்கும் என்ற வகையில் அதனை வரவேற்கிறேன். ஆனால் அதே நேரத்தில் சந்திரசேகர ராவின் சந்திப்புகள் அனைத்தும், காங்கிரசுடன் தீவிர கூட்டணியில் உள்ள கட்சிகளுடனே நடைபெற்று வருகிறது என்பதையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியதுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்