படிக்கட்டில் பயணித்த மாணவன்! தட்டிக்கேட்ட ஓட்டுனருக்கு தலையில் அடி! – ராணிபேட்டையில் அதிர்ச்சி!

புதன், 15 பிப்ரவரி 2023 (11:48 IST)
ராணிப்பேட்டையில் அரசு பேருந்தில் படியில் பயணித்த மாணவனை கண்டித்த டிரைவரை மாணவன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இருந்து அரக்கோணத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அதை பாலாஜி என்பவர் ஓட்டி வந்துள்ளார். பாண்டியநல்லூர் அருகே வந்தபோது மாணவர் ஒருவர் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்துள்ளார். இதனால் பாலாஜி அந்த மாணவனை படியில் நிற்காமல் உள்ளே வருமாறு கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் வேகமாக வந்து பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த டிரைவர் பாலாஜியை தாக்கியுள்ளார். உடனடியாக அவர் பேருந்தை நிறுத்திய நிலையில் பயணிகள் மாணவனை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். மாணவன் தாக்கியதில் டிரைவர் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியுள்ளது.

இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மாணவனை அழைத்து சென்ற போலீஸார் மாணவரின் பெற்றோரை வரவழைத்து மாணவனை கண்டித்து அறிவுரை அளித்து அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே மாணவனை மக்கள் பிடித்து வைத்திருந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்