சென்னையை நெருங்கும் புயல்! அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

வியாழன், 30 நவம்பர் 2023 (16:37 IST)
வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்பார்வை செய்து வருகிறார்.



வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெற்று வரும் நிலையில் சென்னை அருகே கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை முதல் டெல்டா மாவட்டங்கள் வரை கடலோர மாவட்டங்களின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

முக்கியமாக சென்னையில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் நீர் தேங்கியுள்ள நிலையில் சில சுரங்க பாதைகள் நீர் நிரம்பியதால் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் பெருமழை மற்றும் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ததுடன், பல்வேறு துறை அதிகாரிகளும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.



சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீரை வெளியேற்றுவது குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு வந்த புகார் அழைப்புகளையும் எடுத்து பேசி மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் மற்றும் உணவு வழங்குதல், தேவையான மருந்துகளை கையிறுப்பில் வைத்தல், அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தல் ஆகியவற்றில் எந்த பாதிப்பும் இருக்க கூடாது என்று தெரிவித்துள்ளார். அடுத்து புயல் காரணமாக பெருமழை வர உள்ள நிலையில் நீர் தேங்கும் பகுதிகளில் நீரை வெளியேற்ற தேவையான பணியாளர்கள், உபகரணங்களை தயார் நிலையில் வைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.



மேலும் மழை பாதிப்பு உள்ள பகுதிகளில் அப்பகுதியை சேர்ந்த அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்