10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ்! – முதல்வர் அறிவிப்பு!

செவ்வாய், 9 ஜூன் 2020 (12:34 IST)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த வேண்டாம் என பலரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி பெறுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அரசு ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் பொதுத்தேர்வை நடத்தக்கூடாது என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து ஆர்பாட்டம் நடத்துவதற்கான கூட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் தேர்வின்றி அடுத்த வகுப்புக்கு பாஸ் ஆவதாகவும் தெரிவித்துள்ளார்.

கூடவே 11ம் வகுப்புக்கான நிலுவையில் இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அவர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது, இது தவிர 12ம் வகுப்புக்கு நடைபெற வேண்டிய தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்