தண்டவாள இணைப்பு பணி; தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்!

ஞாயிறு, 26 பிப்ரவரி 2023 (10:47 IST)
மதுரை ரயில் நிலையத்தில் தண்டவாள இணைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் தென் மாவட்டங்கள் செல்லும் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அதிகமான ரயில்கள் இயக்கப்படும் ரயில் சந்திப்புகளில் முக்கியமான ரயில் நிலையமாக மதுரை உள்ளது. தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள், கேரளா செல்லும் ரயில்களும் மதுரை வழியாகவே இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தற்போது மதுரை ரயில் நிலையத்தில் தண்டவாள இணைப்பு பணி மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இன்று முதல் மார்ச் 6ம் தேதி வரை ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மதுரை – சண்டிகர் வாராந்திர எக்ஸ்பிரஸ் இன்று மற்றும் மார்ச் 4ம் தேதி ஆகிய தேதிகளில் மதுரையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் வருகிற 28ம் தேதி வரையிலும் மதுரை வழியாக இயங்காது. அதுபோல செங்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் பொதிகை விரைவு ரயிலும் மார்ச் 3 வரை மதுரை வழியாக செல்லாது.

மேலும் நெல்லை – சென்னை விரைவு ரயில் பிப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரையிலும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மற்றும் கொல்லம் – சென்னை விரைவு ரயில் ஆகியவை மார்ச் 1 முதல் 3 வரையிலும் விருதுநகர் ரயில் நிலையத்தில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி சென்று அங்கிருந்து சென்னை செல்லும் என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்