ஜீவசமாதி அடைவதாக கூறிய சாமியார்: இரவு முழுவதும் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம்

வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (08:00 IST)
சிவகங்கையை சேர்ந்த இருளப்பசாமி என்ற சாமியார் நேற்று இரவு ஜீவ சமாதி அடையப் போவதாக அறிவித்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் ஜீவசமாதி அடைய இருப்பதை காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் நேற்று இரவு முழுவதும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது


சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சிவபக்தரான இருளப்பசாமி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் சிவபெருமான் தனது கனவில் வந்து ஜீவசமாதி அடையுமாறு கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து ஜீவசமாதி அடைய அவர் இரண்டு மாதங்களாக தண்ணீரை தவிர வேறு எந்த உணவையும் எடுத்துக் கொள்ளவில்லை


 இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் ஜீவ சமாதி அடையப் போவதாக அறிவிக்கப்பட்டு அக்கம் பக்கத்து கிராமங்கள் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது. இதனால் அவர் ஜீவசமாதி அடைவதை நேரில் பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். இந்த நிலையில் காவல்துறை உதவியுடன் அந்த பகுதிக்கு வந்த மாவட்ட ஆட்சியர், இருளப்பசாமிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். இதனை அடுத்து மருத்துவர்கள் இருளப்பசாமியை மருத்துவ பரிசோதனை செய்தபோது அவரது நாடி துடிப்பு சரியாக இருப்பதை அறிந்தனர். இருப்பினும் ரத்த பரிசோதனை செய்ய இருளப்பசாமியின் ஆதரவாளர்கள் அனுமதிக்கவில்லை

இதனை அடுத்து இருளப்பசாமியை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். ஜீவ சமாதியை நேரில் பார்க்க கூடிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். போலீசார் விசாரணைக்கு பின், ‘ஜீவ சமாதியாகும் முடிவை ஒத்தி வைத்துள்ளதாகவும், பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் இருளப்பசாமி தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்