தேர்வு முடிவுகளை வைத்து விளம்பரம் கூடாது – தனியார் பள்ளிகளுக்கு செக் !

சனி, 20 ஏப்ரல் 2019 (11:05 IST)
பனிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில் அதை வைத்து பள்ளிகள் விளம்பரம் செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள பிளஸ்டூ மாணவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி பொதுத் தேர்வுகள் நடந்தன. மொத்தமாக 8 ,87,992 பேர் தேர்வு எழுதினர். தேர்வுத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 11 ஆம் தேதி நிறைவுபெற்றன. இதையடுத்து நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளில் மொத்தமாக 91.03 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 88.57 சதவீதமும் மாணவிகள் 93.64 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளன. மாணவர்களை விட மாணவிகள் 5 சதவீதம் அதிகளவில் தேர்ச்சியடைந்துள்ளன.

இதையடுத்து அரசுப் பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் அதிகளவில் தேர்ச்சி சதவீதம் வைத்துள்ளன. தனியார் பள்ளிகள் ஆதிக்கம் செலுத்தும் மாவட்டங்களில் அதிக தேர்ச்சி சதவீதமும் வந்துள்ளது. இந்த அதிகப்படியான தேர்ச்சி சதவீதத்தைக் காட்டி தனியார் பள்ளிகள் விளம்பரம் செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்துப் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் ‘ஆரோக்கியமற்ற போட்டி சூழல் மற்றும் மாணவர்களின் மன உளைச்சலை தவிர்க்கும் பொருட்டு அனைத்துப் பள்ளிகளும் பொதுத்தேர்வு முடிவுகளைக் கொண்டு தினசரிகள் மற்றும் பேனர்கள் மூலம் மாணவர்களின் புகைப்படம் கொண்ட விளம்பரங்களை வெளியிடக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. மீறி செயல்படுவோர் மீது  முதன்மை கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்