சசி ஆதரவு எம்எல்ஏ-க்கு 10 கோடி ரூபாய் பணம், 2 கிலோ தங்கம்: போட்டுடைத்த மாஜி எம்எல்ஏ!

சனி, 25 பிப்ரவரி 2017 (13:13 IST)
அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூர் சொகுசு விடுதியில் சசிகலா தரப்பினரின் கட்டுபாட்டில் இருந்த போது அவர்களுக்கு பெரும் பணம் மற்றும் தங்கம் கொடுத்து சசிகலா தரப்பினர் அவர்களின் ஆதரவை பெற்றதாக பொதுவாக பேசப்பட்டுவந்தது.


 
 
ஆனால் இதனை மேடை ஒன்றில் பன்னீர்செல்வத்தின் ஆதரவு அணியில் உள்ள முன்னாள் எம்எல்ஏ மணிமாறன் போட்டுடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை நேற்று சசிகலா ஆதரவாளர்கள், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என இரு தரப்பினரும் கொண்டாடினார்கள். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதியின் எம்எல்ஏ ஏழுமலை. இவர் சசிகலா ஆதரவு. ஆனால் இந்த தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ மணிமாறன் ஓபிஎஸ் ஆதரவாளர்.
 
இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பேசிய மணிமாறன், ஏழுமலை எம்எல்ஏ ஜெயலலிதா கொடுத்த பதவியை மன்னார்குடி கும்பலுக்கு விசுவாசம் காட்டியது கண்டிக்கத்தக்கது. மனசாட்சி இல்லாமல் மாபியா கும்பலுக்கு துணை போனது வருத்தம் அளிக்கிறது என்றார்.
 
மேலும் எம்எல்ஏ ஏழுமலை 10 கோடி ரூபாய் பணம், 2 கிலோ தங்கத்தை வாங்கிக் கொண்டு கூவத்தூரில் இருந்தார். அவர் தொகுதி மக்களின் மனநிலையை அறிந்து செயல்படவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்