அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மீது அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் அவர் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இல்லை எனவும், வெளிநாடு சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
திருச்சி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் அடித்து பரபரப்பை ஏற்படுத்திய சசிகலா புஷ்பா, மாநிலங்களவையில் அதிமுக தலைமை தன்னை பதவி விலக வற்புறுத்தியதாகவும், அடித்ததாகவும் பகீர் குற்றச்சாட்டுகளை வைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதனையடுத்து கட்சியில் இருந்து சசிகலா புஷ்பா அதிரடியாக நீக்கப்பட்டார். இந்நிலையில் அடங்கி போவார் என எதிர்ப்பார்த்தால், தொடர்ந்து பேட்டிகள் கொடுத்தும், பாதுகாப்பு கேட்டும், வழக்கு தொடர்ந்தும் மோதல் போக்கிலே இருந்தார்.
வரும் 22-ஆம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சசிகலா புஷ்பாவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள டெல்லி போலீசார், சசிகலா புஷ்பா அவரது வீட்டில் இல்லை எனவும், அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை என உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சசிகலா புஷ்பா வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன.